ஹீரோ-ஹோண்டா பிரிவினை உறுதியானது

பிரிவினையை உறுதி செய்யும் இறுதிக் கட்டத்தை இரு நிறுவனங்களும் எட்டியுள்ளனவாம். கடந்த 26 வருடங்களாக ஹீரோவும், ஹோண்டாவும் இணைந்து செயல்பட்டு வந்தது. 26 வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த ஹோண்டா, அப்போது பிரபலமாக இருந்த ஹீரோவுடன் கை கோர்த்தது. தயாரிப்பு மற்றும் விற்பனைக்காக இந்த ஒத்துழைப்பு உருவாக்கப்பட்டது.
இரு நிறுவனங்களுக்கும் இடையே ராயல்டி உள்ளிட்டவற்றில் பிரச்சினை தொடங்கியது. மேலும் ஹீரோ ஹோண்டா பைக்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் எழுந்தது. இதனால்தான் இரு நிறுவனங்களுக்கும் இடையே புகைச்சல் அதிகமாகி இப்போது பிரிந்து போக முடிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் பிரிவினை குறித்து பேசப்பட்டது. இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படாமல் இழுபறியாக இருந்து வந்தது. ஹீரோ குரூப்பிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறதாம் ஹோண்டா. ஆனால் அதை இந்தியாவின் ஹீரோ நிறுவனம் ஏற்கவில்லை. இதனால்தான் இழுபறி நிலவி வந்தது.
இரு தரப்புக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தப்படி, பங்குகள் விற்பனை தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே புகைச்சல் எழுந்துள்ளதாம்.
தற்போதைய ஹீரோ ஹோண்டா குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ. 10,000 கோடியாகும். ஹீரோ ஹோண்டாவின் பங்கு மதிப்பு மும்பை பங்குச் சந்தையில் ரூ. 1954 ஆக உள்ளது.
ஹோண்டா நிறுவனம் ஹீரோவுடன் இணைந்து செயல்பட்டாலும் கூட இந்திய டூவீலர் பிரிவில் தனி படைப்புகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஹீரோ ஹோண்டாவுக்குப் போட்டியாக விளங்கும் ஹோண்டா நிறுவனம் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களை தயாரித்து விற்று வருகிறது. தற்போது ஹீரோ ஹோண்டாவுக்குப் போட்டியாக 100 சிசி மோட்டார் சைக்கிள் பிரிவில் அது குதிக்கவுள்ளது.
இந்த பிரிவினையால் ஹோண்டாவை விட ஹீரோவுக்குத்தான் பெரும் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள். டூவீலர் மார்க்கெட்டில் தனது இருப்பை அது வெளிக்காட்டவே காலம் பிடிக்கும் என்கிறார்கள்.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5.051 மோட்டார் சைக்கிள்களை விற்று சாதனை படைத்திருந்தது ஹீரோ ஹோண்டா குழுமம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








