'புல்லட்' மோட்டார்சைக்கிள் ஆலைக்கு 50 ஏக்கர் நிலம்: தமிழக அரசு ஒதுக்கீடு

வர்த்தக வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற ஐஷர் நிறுவனத்தின் ஓர் அங்கமான ராயல் என்பீல்டு நிறுவனம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் நாட்டின் மிகப்பழமை வாய்ந்த நிறுவனமாக திகழ்கிறது.
இந்த நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு ஆலை சென்னை திருவொற்றியூரில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மோட்டார்சைக்கிள் உற்பத்தியை கணிசமாக உயர்த்த ராயல் என்பீல்டு நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக, புதிய ஆலை கட்டுவதற்கு நிலம் ஒதுக்கி தருமாறு, தமிழக அரசிடம் அந்த நிறுவனம் கோரிக்கை வைத்தது.
இதை பரிசீலித்த தமிழக அரசு, அந்த நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, சென்னை அருகேயுள்ள ஓரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஐஷர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சித்தார்த் லாலிடம் நேற்று வழங்கினார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த் லால் கூறியதாவது:
"தற்போது உள்ள ஆலை ஆண்டுக்கு 50,000 மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கிறது.
வர்த்தகத்தை விரிவாக்குவதற்கு ஏதுவாக ஆண்டுக்கு 1.50 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யும் வகையில் புதிய ஆலை கட்ட உள்ளோம்.
புதிய ஆலை கட்டுமானத்திற்கு ரூ.350 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆலை விரிவாக்க பணிகள் முடி்வடைந்தவுடன் எங்களது மொத்த மோட்டார்சைக்கிள் உற்பத்தி மும்மடங்காக உயரும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








