அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நம்பர் ஒன் இடத்தை பிடிப்போம்-ஹோண்டா

ஹீரோ ஹோண்டா கூட்டுக் குழுமத்திலிருந்து விலகிய ஹோண்டா, இந்திய சந்தையில் தனித்து இரு சக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. சந்தையில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள ஹோண்டா இந்தியா நிறுவனம் தேவை அதிகரித்து வருவதையடுத்து, விரிவாக்கப் பணிகளில் கவனம் செலுத்த வருகிறது.
இருசக்கர வாகன தயாரிப்பில் உலகின் மாபெரும் நிறுவனமாக திகழும் ஹீரோ ஹோண்டாவின் இடத்தை பிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது ஹோண்டா. இதற்காக, ராஜஸ்தானில் இரண்டாவது தொழிற்சாலையை கட்டி வரும் ஹோண்டா, விரைவி்ல் மூன்றாவது தொழிற்சாலையையும் கட்ட இருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், இந்திய சந்தையில் சீக்கிரமாக முக்கிய இடத்தை பிடிக்கும் விதமாக, அடுத்த ஆண்டு 100 சிசி பைக்கை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா தலைவர் ஷின்ஜி அயோமா கூறியதாவது:
"நடப்பு நிதி ஆண்டில் 16.5 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளோம். இது கடந்த நிதி ஆண்டை ஒப்பிடும்போது, விற்பனையில் 30 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டில் 27 சதவீத வளர்ச்சியை இலக்காக கொண்டு 21 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய சந்தையின் டிரெண்டு மாறிவிடும். இருசக்கர வாகனங்களுக்கான முக்கிய சந்தையாக கிராமப்புறங்கள் உருவெடுக்கும். எனவே, கிராமப்புறங்களில் டீலர்களை அதிகரிக்கவும், அடுத்த ஆண்டு 100 சிசி பைக் அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு உள்ளோம். இவற்றின் மூலம், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய சந்தையில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








