கர்நாடகாவில் புதிய மோட்டார்சைக்கிள் தொழிற்சாலை அமைக்கிறது ஹோண்டா

ஹீரோ ஹோண்டாவிலிருந்து விலகிய பிறகு இந்தியாவில் பெரிய அளவிலான விரிவாக்கப் பணிகளை மிக குறுகிய காலத்தில் மேற்கொண்டு வருகிறது ஜப்பானை சேர்ந்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம்.
ரூ.500 கோடி முதலீட்டில் ராஜஸ்தான் மாநிலம், தபுகரா என்ற இடத்தில் இரண்டாவது தொழிற்சாலையை கட்டி வருகிறது ஹோண்டா. இந்த புதிய தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டன.
ஆண்டுக்கு 6 லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழிற்சாலை வரும் ஜூன் 1ந் தேதி முதல் செயல்பட துவங்க உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் மேலும் ஒரு புதிய தொழிற்சாலையை கட்டப்போவதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
பெங்களூருக்கு அருகிலுள்ள நரசபுரம் என்ற இடத்தில் இந்த புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக ஹோண்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 12 லட்சம் மோட்டார்சைக்கிள் தயாரிக்கும் திறன்படைத்த வகையில் இந்த தொழிற்சாலையை கட்ட ஹோண்டா தீர்மானித்துள்ளது. வரும் 2013ம் ஆண்டு மத்தியில் இந்த புதிய தொழிற்சாலையில் மோட்டார்சைக்கிள் உற்பத்தி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழிற்சாலைக்கான முதலீட்டு விபரங்களை தெரிவிக்க ஹோண்டா மறுத்துவிட்டது. இந்த தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வந்தவுடன் அந்த நிறுவனத்தின் உற்பத்தி திறன் இரண்டு மடங்காக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








