சொந்த தொழில்நுட்பத்தில் பைக்குகளை அறிமுகப்படுத்த ஹீரோ தீவிரம்

கடந்த மார்ச் மாதம் ஹீரோ ஹோண்டா கூட்டு குழுமத்திலிருந்து ஹோண்டா கழன்று கொண்டது. இதனால், மார்க்கெட்டில் ஹீரோ நிறுவனம் தனித்து களமிறங்கியுள்ளது.
இருப்பினும், வரும் 2014ம் ஆண்டு வரை தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வதற்காக ஹோண்டா மற்றும் ஹீரோ இடையே புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹோண்டா தொழில்நுட்ப உதவியை நிறுத்துவதற்கு முன்பே முழுக்க முழுக்க தனது சொந்த தொழில்நுட்பத்தில் மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் பணிகளில் ஹீரோ மோட்டா கார்ப் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்காக, சர்வதேச அளவில் தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள ஹீரோ தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து ஹீரோ மோட்டா கார்ப் விற்பனை பிரிவு மூத்த துணை தலைவர் அனில் துவா கூறியதாவது:
"இருசக்கர வாகன தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளப்ட்டுள்ளது. இதற்காக, ஏராளமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
தவிர, எங்களது வடிவமைப்பு வல்லுனர்கள் உள்நாட்டு சந்தையின் தேவை மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் வடிவமைக்கப்படும். வரும் 2014ம் ஆண்டுக்குள் எங்களது சொந்த பிராண்டில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








