ரூ.1000 கோடியில் ஆந்திராவில் புதிய தொழிற்சாலை அமைக்க ஹோண்டா முடிவு

மோட்டார்சைக்கிள் விற்பனையில் முன்னிலை வகிக்கும் ஹோண்டா நிறுவனம், ஹரியானா மாநிலம் மானேசரில் தொழிற்சாலை அமைத்து மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 15 லட்சம் மோட்டார்சைக்கிள்களை தயாரிக்கும் திறன் கொண்டது.
மேலும், ராஜஸ்தானில் ஒரு புதிய தொழிற்சாலையை ஹோண்டா அமைத்து வருகிறது. ஆண்டுக்கு 6 லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த தொழிற்சாலை விரைவில் செயல்பட துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விற்பனை வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்து வருவதையடுத்து, மூன்றாவது தொழிற்சாலையை நிர்மானிக்க ஹோண்டா முடிவு செய்துள்ளது. இந்த புதிய தொழிற்சாலை ஆந்திராவில் அமைய உள்ளது.
இதுகுறித்து ஆந்திர அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
"ஆந்திராவில் புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து ஹோண்டா நிறுவனம் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, தொழிற்சாலை அமைக்க 100 ஏக்கர் நிலம் வழங்குமாறு அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேடக் மற்றும் நல்கொண்டா மாவட்டத்தில் தொழிற்சாலை அமைப்பதற்கு இடம் காண்ப்பிக்கப்பட்டுள்ளது.
இடம் தேர்வானவுடன் புதிய தொழிற்சாலை அமைக்கும் பணிகள் துவங்கும். ரூ.1000 கோடி முதலீட்டில் இந்த புதிய தொழிற்சாலை தென்னிந்தியாவில் அமையும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் தொழிற்சாலை," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








