ஸ்கூட்டர்ஸ் இந்தியாவை வாங்க போட்டா போட்டி

லேம்ப்ரட்டா மற்றும் விஜய் சூப்பர் பிராண்டுகளில் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த ஸ்கூட்டர்கள் ஒரு காலத்தில் வெகு பிரபலமாக இருந்தது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை லக்னோவில் உள்ளது. இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஸ்கூட்டர்கள் தயாரிப்பை அந்த நிறுவனம் திடீரென நிறுத்திவிட்டது.
அதன்பின், மூன்று சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வருவாய் வெகுவாக குறைந்ததால் கடும் நிதிநெருக்கடியில் அந்த நிறுவனம் சிக்கி தவிக்கிறது.
இதையடுத்து, ஸ்கூட்டர்ஸ் இந்தியாவை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசு 95 பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. இவற்றை முழுவதுமாக விற்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இதைத்தொடர்ந்து, ஸ்கூட்டர்ஸ் இந்தியாவை வாங்குவதற்கு மூன்று சக்கர வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற ராஜ்கோட்டை சேர்ந்த அதுல் ஆட்டோ மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அதுல் ஆட்டோ நிர்வாக இயக்குனர் கூறுகையில்,"ஸ்கூட்டர்ஸ் இந்தியாவின் 50 சதவீத பங்குகளை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசு அனுமதி கொடுத்தால் பங்குகள் அனைத்தையும் வாங்கவும் தயாராக உள்ளோம்," என்றார்.
இதேபோன்றே, எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மொராதாபாத்தை சேர்ந்த லோகியா ஆட்டோவும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா பங்குகளை வாங்கிக்கொள்வதற்கு தற்போது விருப்பம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








