ஸ்கூட்டர்ஸ் இந்தியா பங்குகளை வாங்கும் திட்டம் இல்லை: மஹிந்திரா

ஸ்கூட்டர்கள் மற்றும் ஆட்டோ தயாரிப்பில் பழமைவாய்ந்த நிறுவனமான ஸ்கூட்டர்ஸ் இந்தியா மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதன் 95 சதவீத பங்குகள் மத்திய அரசின் வசம் உள்ளது.
இந்த நிலையில், கடந்த 2003ம் ஆண்டு முதல் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து, ஸ்கூட்டர்ஸ் இந்தியாவின் பங்குகளை முழுவதுமாக விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த மேமாதம் ஒப்புதல் அளித்தது. ஸ்கூட்டர்ஸ் இந்தியாவை தூக்கிநிறுத்த தகுதிவாயந்த நிறுவனத்திடம் பங்குகள் விற்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, ஸ்கூட்டர்ஸ் இந்தியாவை கையகப்படுத்த மஹிந்திரா, அதுல் ஆட்டோ உள்ளிட்ட முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், ஸ்கூட்டர்ஸ் இந்தியாவை வாங்கும் திட்டத்திலிருந்து மஹிந்திரா பின்வாஙகியுள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ கூறுகையில்," ஸ்கூட்டர்ஸ் இந்தியாவை வாங்குவது பற்றி முழுமையாக பரிசீலிக்கப்பட்டுவிட்டது. அந்த நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை நாங்கள் கைவிட்டுவிட்டோம். எதிர்காலத்திலும் ஸ்கூட்டர்ஸ் இந்தியாவை வாங்குவது பற்றி பரிசீலனை செய்யப்போவதில்லை," என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதனால், ஸ்கூட்டர்ஸ் இந்தியாவின் பங்குகளை அதுல் ஆட்டோ நிறுவனம் கையகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








