மேமாதம் மொபட் விற்பனை 22% உயர்வு

கிராமப்புறங்களின் நம்ம ஊரு வண்டியாக திகழ்ந்த மொபட்டுகள் 100சிசி பைக்குகளின் வருகையால் மார்க்கெட்டில் பின்தங்கின. நகர்ப்புறங்களிலும் பவர் ஸ்கூட்டர்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பும் மொபட்டுகளின் மவுசை குறைத்தன.
இதனால், மொபட் விற்பனையில் ஈடுபட்டிருந்த நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. டிவிஎஸ் நிறுவனத்தின் எக்ஸ்எல் சூப்பர் மொபட் மட்டும் தற்போது மார்க்கெட்டில் நீடித்து நின்று வருகிறது.
இந்த நிலையில், மொபட் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டு வருவதாக இந்திய வாகன உற்பத்தியாளர் சம்மேளனம்(சியாம்) தெரிவித்துள்ளது. குறிப்பாக, கிராமப்புற சந்தையில் மொபட்கள் விற்பனை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடந்த மேமாதத்தில் நாட்டில் மொத்தம் 70,001 மொபட்டுகள் விற்பனையாகி இருக்கிறது. இதை கடந்த ஆண்டு மேமாதத்துடன் ஒப்பிடும்போது (54,702 மொபட்டுகள்) விற்பனை 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மொபட்டுகளுக்கான மவுசு மீண்டும் கூடியுள்ளதை காட்டுகிறது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1990ம் ஆண்டுகளில் 100சிசி பைக் வரவால் ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டை இழந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பவர் ஸ்கூட்டர்கள் மீதான மோகம் அதிகரித்துள்ளதால், இருசக்கர மார்க்கெட்டில் ஸ்கூட்டர்கள் முக்கிய இடத்தை பிடித்துக்கொண்டுள்ளன.
இதேபோன்று,மார்க்கெட்டில் மொபட்டுகளும் மீண்டும் ஒரு ரவுண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








