தோனி, ரவீந்திர ஜடேஜாவுக்கு ஹீரோ மோட்டோ கார்ப் பைக்குகள் பரிசு

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய வீரர்கள் அபாரமாக விளையாடி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்தனர்.
இந்த நிலையில், ஒரு நாள் தொடரில் பொறுப்புடன் ஆடி தொடரை வெல்வதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த கேப்டன் தோனி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதேபோன்று, கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பக்கம் இருந்த ஆட்டத்தை தனது மாயஜால பந்து வீச்சால் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியா பக்கம் கொண்டு வந்து வெற்றிக்கு வித்திட்ட இளம் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த இருவருக்கும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தனது ஸ்போர்ட்ஸ் பைக்குகளை பரிசாக வழங்கியது.கேப்டன் தோனிக்கு கரீஷ்மா இசட்எம்ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்கை ஹீரோ பரிசாக வழங்கியது.
ஏற்கனவே தோனி ஒரு பைக் பிரியர். ஹம்மர் உள்ளிட்ட ஏராளமான கார்கள் வரிசை கட்டி நின்றாலும், அவருக்கு டூவீலரில் வெளியில் சுற்றுவது என்றால் அலாதி பிரியம்.இந்த நிலையில், ஹீரோ நிறுவனம் தனது அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக்கான கரீஷ்மா இசட்எம்ஆரை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளது.
பைக்கை பரிசாக வென்றதும் கைகள் பரபரத்த தோனி அந்த பைக்கில் பிரவீண் குமார் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரை ஏற்றிக்கொண்டு மைதானத்தில் ஒரு ரவுண்டு வந்தார்.
இதேபோன்று, ஆட்டநாயகன் விருது பெற்ற ரவீந்திர ஜடேஜாவுக்கு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தனது புத்தம் புதிய ஆன் ரோடு மற்றும் ஆப் ரோடில் செல்லும் திறன் படைத்த 150 சிசி இம்பல்ஸ் பைக்கை ஹீரோ மோட்டோ கார்ப் பரிசாக வழங்கியது.
ஹோண்டா விலகிய பிறகு ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தனது பிராண்டில் அறிமுகப்படுத்திய முதல் பைக்இம்பல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பைக் ரூ.66,800 விலையில் விற்பனைக்கு வர உள்ளது.


Click it and Unblock the Notifications








