புதிய மாடல்களை அறிமுகப்படுத்த ஸ்கூட்டர்ஸ் இந்தியா திட்டம்
நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான ஸ்கூட்டர்ஸ் இந்தியா மீண்டும் சந்தையை பிடிக்க விஜய் சூப்பர் பிராண்டில் புதிய ஸ்கூட்டர் மாடல்களை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லக்னோவை சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான ஸ்கூட்டர் இந்தியா உள்நாட்டில் விஜய் சூப்பர் பிராண்டிலும், வெளிநாடுகளுக்கு லேம்ப்பரட்டா பிராண்டிலும் ஸ்கூட்டர்களை தயாரித்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 1997ம் ஆண்டு தனது ஸ்கூட்டர்களுக்கு மார்க்கெட் போனதால் உற்பத்தியை திடீரென நிறுத்தி விட்டது. இருப்பினும், விக்ரம் பிராண்டில் மூன்று சக்கர வாகனங்களை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில், ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலையில் ஸ்கூட்டர்ஸ் இந்தியா உள்ளது.
இந்த நிலையில், ஸ்கூட்டர்ஸ் இந்தியாவின் 95 சதவீத பங்குகளை தனியாரிடம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கிவிட்டது.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் பொதுத்தேர்தல் வருவதால் ஸ்கூட்டர் இந்தியா பங்குகளை விற்பனை செய்யும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனிடையே, இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்கும் விதமாக புதிய மாடல்களை அறிமுகம் செய்யப்போவதாக ஸ்கூட்டர்ஸ் இந்தியா அறிவித்துள்ளது. ஆனால், அது ஸ்கூட்டர்களா அல்லது மூன்று சக்கர வாகனங்களா என்பது குறித்து ஸ்கூட்டர்ஸ் இந்தியா தெரிவிக்கவில்லை.
இருப்பினும், பவர் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருவதால் மீண்டும் புதிய ஸ்கூட்டர் மாடல்களை ஸ்கூட்டர்ஸ் இந்தியா அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








