மோட்டார்சைக்கிள் விலை உயர்வு குறித்து டிவிஎஸ் பரிசீலனை

கடந்த ஆண்டு வாகனங்கள் தயாரிப்பதற்கான முக்கிய கச்சாப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதையடுத்து, உற்பத்தி செலவீனத்தை தாக்குப்பிடிக்க முடியாத பல நிறுவனங்கள் ஜனவரி மாதம் கார் மற்றும் பைக்குகளின் விலையை உயர்த்தின. டிவிஎஸ் நிறுவனமும் மோட்டார்சைக்கிள்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்தியது.
இந்நிலையில், கச்சாப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, மோட்டார்சைக்கிள்கள் விலையை உயர்த்துவது குறித்து டிவிஎஸ் நிறுவனம் பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக, டெல்லியில் நடந்த புதிய அப்பாச்சி பைக் அறிமுக விழாவில் கலந்து கொண்ட டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் கோயிந்தி சூசகமாக கூறினார்.
செய்தியாளர்களிடம் கோயிந்தி கூறியதாவது:
"எங்கள் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். இந்த வகையில், ஏபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட பிரிமியம் அப்பாச்சி மாடலை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
ஏபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட முதல் இந்திய பைக் என்ற பெருமையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அப்பாச்சி டிவிஎஸ் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பை மேலும் உயர்த்தும்.
மோட்டார்சைக்கிள் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வந்தாலும், கச்சாப் பொருட்களின் விலை தொடரந்து ஏறுமுகத்தில் உள்ளது. எனவே, மோட்டார்சைக்கிள்களின் விலையை மீண்டும் உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
ஒவ்வொரு காலாண்டிலும், உற்பத்தி செலவீனத்திற்கேற்ப மோட்டார்சைக்கிள்கள் விலையை ஆய்வு செய்வது வழக்கம். எனவே, தற்போது மோட்டார்சைக்கிள் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். மார்ச் மாத இறுதியில் விலையை உயர்த்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








