காற்றாலையில் இயங்கும் பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு
பைசா செலவில்லாமல் காற்று சக்தியில் இயங்கும் மோட்டார்சைக்கிளை தஞ்சையிலுள்ள பிரிஸ்ட் பல்கலைகழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடியிலுள்ள ஹைடெக் புராஜெக்ட் நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் முரளி, ஜெயராஜ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, தஞ்சையிலுள்ள பிரிஸ்ட் பல்கலைகழக் கல்லூரி மாணவர்கள் மாற்று எரிபொருள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் பல புதிய வாகனங்களை கண்டுபிடித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது பெட்ரோல் மற்றும் காற்று சக்தியில் இயங்கும் புதிய ஹைபிரிட் பைக்கை கண்டுபிடித்துள்ளனர். இந்த பைக்கின் முன்பக்கம் ஃபோர்க் ஸ்டெம்மில் காற்றாலை பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், பைக்கில் உள்ள தனி பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. முன்பக்க சக்கரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டாருடன் இந்த பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது.
முதலில் பெட்ரோலில் இந்த பைக் இயங்குகிறது. பைக் வேகமெடுத்ததும் காற்றாலை சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்து பேட்டரியில் சேமிக்கிறது. ஒரு ஸ்விட்சை தட்டினால், முன்பக்க சக்கரத்தை ஃபோர்க் ஸ்டெம்மில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார் இயக்குகிறது.
பேட்டரியில் இயங்கும்போது பெட்ரோல் இணைப்பை நிறுத்திவிடலாம். பேட்டரியில் செல்லும்போது இந்த பைக் சராசரியாக 30கிமீ முதல் அதிகபட்சம் 40கிமீ வேகத்தில் செல்கிறது.
இரண்டு மணிநேரம் பெட்ரோலில் செல்லும்போது சேமிக்கப்படும் மின்சாரம் மூலம், பேட்டரியில் ஒரு மணிநேரம் (22 கிமீ தூரம்) வரை செல்ல முடியும் என்று மாணவர்கள் தெரிவித்தனர். பேட்டரியில் செல்லும்போது இந்த பைக் சுற்றுப்புறச் சூழலுக்கு துளி கூட மாசு ஏற்படுத்தாது என்பதே இதன் முக்கிய விசேஷம்.
நிதி ஆதாரம், போதிய கட்டமைப்பு வசதிகள் போன்ற காரணங்களால் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் வணிக நிலையை எட்டுவதற்கு காலதாமதம் ஏற்படலாம். ஆனால், ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அதை வெற்றிகரமாக சோதனை செய்து காட்டுவதே சாதனைதான்.
அந்த வகையில், இந்த பைக்கை கண்டுபிடித்த மாணவர்களுக்கும், வழிகாட்டியாக இருந்த ஹைடெக் நிறுவன ஆய்வாளர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, புதிய கண்டுபிடிப்புகள் தொடர டிரைவ்ஸ்பார்க் தளம் வாழ்த்துகிறது.


Click it and Unblock the Notifications








