100 சிசி பாக்ஸரை மீண்டும் களமிறக்க பஜாஜ் திட்டம்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பாக்ஸர் 100 சிசி பைக் விற்பனையில் கொடி கட்டி பறந்தது. குறிப்பாக, கிராமப்புற சந்தையில் பாக்ஸருக்கு அமோக வரவேற்பு.
இந்த நிலையில், புதிய மாடல்கள் வருகைக்காக பாக்ஸர் பைக் உற்பத்தியை நிறுத்தியது பஜாஜ். இருப்பினும், பாக்ஸர் என்ற பெயருக்கு இருக்கும் பயன்படுத்தி தற்போதைய சந்தைப் போட்டியை சமாளிக்கும் முயற்சிகளை பஜாஜ் ஆட்டோ துவங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் 150 சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட பாக்ஸர் பைக்கை பஜாஜ் விற்பனைக்கு கொண்டு வந்தது. ஆனால், அந்த பைக் லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் மட்டுமே செல்வதும், வடிவமைப்பு கவர்ச்சியாக இல்லாததும் மார்க்கெட்டில் இடமில்லாமல் ஆக்கிவிட்டது.
இதையடுத்து, பாக்ஸர் 150சிசி பைக்கின் உற்பத்தியை நிறுத்திவிட்டு பாக்ஸர் 100 சிசி மாடலை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை பஜாஜ் ஆட்டோ துவங்கியுள்ளது. பஜாஜ் ஆட்டோவின் தொழிற்சாலை அருகில் புதிய 100சிசி பாக்ஸர் பைக் சமீபத்தில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
எனவே, விரைவில் புதிய 100 சிசி பாக்ஸரை பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.40,000 எக்ஸ்ஷோரூம் விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படும் புதிய பாக்ஸர் கிராமப்புற மார்க்கெட்டில் மீண்டும் ஒரு ரவுண்டு வரும் என்று பஜாஜ் ஆட்டோ நம்புகிறது.


Click it and Unblock the Notifications








