பிஎம்டபிள்யூ மோட்டாராடுடன் கூட்டணி அமைக்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ்

சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற பிஎம்டபிள்யூவின் சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டாராடு இந்திய மார்க்கெட்டில் இருந்தாலும் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இதற்கு விலைதான் அடிப்படை காரணம். இறக்குமதி செய்து விற்பனை செய்வதால் பிற நிறுவனங்களின் தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது பிஎம்டபிள்யூ பைக்குகள் விலை நெருங்க முடியாத அளவுக்கு மிக அதிகம்.
எனவே, இந்தியாவிலேயே தனது சூப்பர் பைக்குகளை அசெம்பிளிங் செய்து விற்பனை செய்ய பிஎம்டபிள்யூ முடிவு செய்துள்ளது. இதேபோன்று, உள்நாட்டு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் விற்பனையில் போட்டி போட முடியாமல் பின்தங்கியுள்ளது.
ஹோண்டாவிடம் மூன்றாம் இடத்தை இழந்து நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. இதையடுத்து, மீண்டும் பழைய இடத்துக்கு முன்னேறுவதற்கு அந்த நிறுவனம் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இருதரப்பும் பயன்பெறும் வகையில் பிஎம்டபிள்யூ-டிவிஎஸ் மோட்டார்ஸ் விரைவில் ஒப்பந்தம் செய்து கொள்ள இருக்கின்றன. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
இதனை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் தொடர்பு மூத்த துணைத் தலைவர் செசில் தேவார்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிஎம்டபிள்யூ மோட்டாராடு பைக்குகளை டிவிஎஸ் மோட்டார்ஸ் தொழிற்சாலைகளில் அசெம்பிளிங் செய்ய வழிபிறக்கும். டிவிஎஸ் ஷோரூம்களிலேயே பிஎம்டபிள்யூ பைக்குகளை விற்பனை செய்யவும் திட்டம் உள்ளது.
மேலும், பிஎம்டபிள்யூ பைக்குகள் மார்க்கெட்டில் கடும் போட்டியை கொடுக்கும் வகையிலான விலையில் விற்பனை செய்ய முடியும். இதேபோன்று, சூப்பர் பைக்குகளை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை டிவிஎஸ் மோட்டார்சுக்கு பிஎம்டபிள்யூ வழங்கும்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் மார்க்கெட்டில் பின்னுக்குத் தள்ளப்பட்ட டிவிஎஸ் மோட்டார்ஸ் சிறந்த தொழில்நுட்பத்துடன் களமிறங்கி மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பு கிடைக்கும். மேலும், இரு நிறுவனங்களும் இணைந்து புதிய 250 சிசி பைக்கை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








