குறைந்த விலையில் புதிய பைக்குகளை களமிறக்க ஹீரோ திட்டம்

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோ கார்ப், விற்பனையை கூட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், போட்டி நிறுவனங்களால் தனது முதலிடத்தை தக்கவைக்கவும் அந்த நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பாமர மக்களின் பைக் கனவை நனவாக்கும் வகையில், ரூ.20,000 முதல் ரூ.30,000 விலையில் புதிய பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது அந்த நிறுவனம் விற்பனை செய்து வரும் சிடி டீலக்ஸ் பைக் ரூ.34,500 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைவிட குறைந்த விலையில் இருக்குமாறு புதிய பைக்குகள் வரும் என்று தெரிகிறது.
மொபட் மோட்டார்சைக்கிள்களை வாங்கும் வாடிக்கையாளரை பைக் வாங்குவதற்கு கவர்வதற்கு ஏதுவாக இந்த பைக்குகளை ஹீரோ அறிமுகம் செய்கிறது.
இதுகுறித்து ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் சிஇஓ பவன் முஞ்சால் கூறியதாவது:
"மிகக் குறைந்த விலையில் புதிய பைக் மாடல்களை விற்பனை செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். இந்த செக்மென்ட்டில் அதிக வாடிக்கையாளர்கள் இருப்பதாக உணர்கிறோம்.
எனவே, குறைந்த விலை பைக்குகளுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறோம். மேலும், மொபட் வைத்திருப்பவர்கள் பைக்குக்கு மாறுவதற்கான வாய்ப்பாகவும், பைக் வாங்குவதை கனவாக கொண்டிருக்கும் அடித்தட்டு மக்களின் கனவை நிறைவேற்றும் வகையிலும் இந்த பைக்குகள் இருக்கும்.
அதேவேளை, உதிரிபாகங்கள் விலை உயர்வு, உற்பத்தி செலவீனங்கள் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், மிகக்குறைந்த விலையில் பைக்கை விற்பனைக்கு கொண்டு பல சவால்கள் இருக்கின்றன. இருப்பினும், அந்த செக்மென்ட்டில் உள்ள அளப்பரிய வாய்ப்பை கருத்திக்கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








