ஹீரோ மோட்டோகார்ப் மார்க்கெட் பங்களிப்பில் பெரும் சரிவு: காரணம் என்ன?

நாட்டின் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்த ஹீரோ ஹோண்டாவிலிருந்து கடந்த ஆண்டு ஹோண்டா கழன்று கொண்டது. இதையடுத்து, முஞ்சால் குழுமத்தின் ஓர் அங்கமான ஹீரோ மோட்டோ கார்ப் தனித்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஹீரோ பிரிந்தபோதிலும் கடந்த ஏப்ரல் மாதம் வரை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் மார்க்கெட் பங்களிப்பு ஸ்திரமாகவே இருந்தது. இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டில் மாதத்துக்கு மாதம் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் பங்களிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.
கடந்த ஏப்ரலில் 46.2 சதவீதமாக இருந்த ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் பங்களிப்பு செப்டம்பரில் 36.8 சதவீதமாக குறைந்துவிட்டது. நடப்பு நிதி ஆண்டில் மார்க்கெட் பங்களிப்பு ஒட்டுமொத்தமாக 3 சதவீதம் குறைந்தாலும், மாதாமாதம் விற்பனை சரிந்து வருவது அந்த நிறுவனத்தை பெரும் கவலை கொள்ள செய்துள்ளது.
மேலும், ஹீரோவின் அதிகம் விற்பனையாகும் ஸ்பிளென்டர் விற்பனையை டிஸ்கவர் விஞ்சி விட்டதாக பஜாஜ் ஆட்டோ கூறியுள்ளது. ஹீரோவின் விற்பனை சரிவுக்கு ஸ்கூட்டர் மார்க்கெட் அதீத வளர்ச்சி கண்டு வருவதே முக்கிய காரணம் என சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஊரக மார்க்கெட்டுகளில் வாடிக்கையாளர்களின் கவனம் தற்போது ஸ்கூட்டர்கள் மீது திரும்பியுள்ளதால் பைக் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும், பஜாஜ், ஹோண்டாவின் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு கூடி வருவதும் முக்கிய காரணமாக கூறுகின்றனர்.
கடந்த மாதம் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது பற்றி ஹீரோ செய்திதொடர்பாளர் கூறுகையில்," உற்பத்தி மற்றும் இருப்பு கணக்குகளை சரிகட்டியதால் சரிவு ஏற்பட்டது. நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-செப்டம்பர் கால கட்டத்தில் ஸ்பிளென்டர்தான் உலகின் அதிகம் விற்பனையான பைக். மொத்தம் 12.33 லட்சம் ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையாகியிருக்கிறது," என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








