ஹீரோ கவனத்திற்கு.. 500 புதிய டீலர்களை நியமிக்கும் ஹோண்டா!

ஹீரோவிலிருந்து பிரிந்த பிறகு வர்த்தக விரிவாக்கப் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது ஹோண்டா. மேலும், அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மார்க்கெட்டில் நல்ல டிமான்ட்டும் இருக்கிறது.
எனவே, நடப்பு நிதியாண்டில் புதிதாக 500 டீலர்கள் மற்றும் சப் டீலர்களை நியமிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. டயர்2 மற்றும் டயர்3 எனப்படும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் இந்த புதிய டீலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த புதிய டீலர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான சேவை வழங்க முடியும் என்பதோடு விற்பனையையும் வெகுவாக அதிகரிக்க முடியும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்த புதிய டீலர்களின் பலத்துடன் நடப்பு நிதியாண்டில் 27.5 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய அந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டும் வகையில் ஹோண்டாவிடம் உற்பத்தி திறன் இருக்கிறது.
ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் செயல்பட்டு வரும் இரண்டு ஆலைகள் மூலம் ஆண்டுக்கு 28 லட்சம் பைக்குகளை தயாரிக்கும் திறனை அந்த நிறுவனம் பெற்றிருக்கிறது. இதுதவிர, கர்நாடகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய ஆலை செயல்பாட்டுக்கு வந்தவுடன் ஹோண்டாவின் உற்பத்தி திறன் கணிசமாக உயரும்.
இதனால், தனது தயாரிப்புகளுக்கு காத்திருப்பு காலம் வெகுவாக குறைந்துவிடும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்போது ஹோண்டாவின் பெரும்பாலான பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களுக்கு காத்திருப்பு காலம் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








