பார்முலா ஒன் பந்தயத்தை தொடர்ந்து இந்தியாவில் சர்வதேச பைக் ரேஸ்

கடந்த ஆண்டு டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் கட்டப்பட்டுள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் முதன்முறையாக பார்முலா ஒன் கார் பந்தயங்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தன. இதனால், சர்வதேச அளவில் இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் அஸ்தஸ்து ஒரு புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், பார்முலா ஒன் கார் பந்தயம் போன்று உலக அளவில் முதன்மையான பைக் பந்தயமாக கருதப்படும் உலக சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் பந்தயங்கள் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதை உலக சூப்பர் பைக் சம்மேளனமும் சூசகமாக கூறியுள்ளது.
பார்முலா ஒன் கார் பந்தயங்கள் நடந்த அதே புத் இன்டர்நேஷனல் ரேஸ் டிராக்கில்தான் உலக சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் பந்தயங்களும் நடைபெறும். டுகாட்டி, யமஹா, கவாஸாகி, ஹோண்டா, சுஸுகி உள்ளிட்ட அனைத்து முன்னணி அணிகளும் இந்த பந்தயத்தில் கலந்து கொள்ளும் என்பதால் உலக அளவில் இந்தியாவின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் பந்தயங்கள் புதிய அத்தியாயத்தை எட்டும்.
தவிர, ஏராளமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரியர்களும் இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வாய்ப்பும் கணிசமாக அதிகரிக்கும் என்பது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கும் இது பெரும் விருந்து படைக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
ஆசிய கண்டத்தில் இரண்டு நாடுகளில் அடுத்த ஆண்டு மோட்டோ ஜிபி பந்தயங்கள் நடைபெறும் என்று உலக சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதில், ஒன்று இந்தோனேஷியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, மீதமொன்று இந்தியாவில் நடைபெறலாம் என்று நம்ப்படுகிறது.


Click it and Unblock the Notifications








