குடிபோதை டிரைவிங்கை எச்சரிக்கும் ஹெல்மெட்: சென்னை மாணவர் கண்டுபிடிப்பு

குடிபோதையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களில் ஏராளமானோர் உயரிழக்கின்றனர். இதேபோன்று, மொபைல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டும்போதும் பலர் உயரிழக்கின்றனர்.
இதனை தடுக்கும் விதமாக சென்னை தொழில்நுட்ப கழகத்தில் முதுகலை பொறியியல் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர் ஜெய் ராஜேஷ் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த தொழில்நுட்ப நாள் கொண்டாட்டத்தில் இந்த புதிய தொழில்நுட்பம் குறித்த செயல்முறை விளக்கத்தை செய்து காட்டி அனைவரையும் அசத்தினார்.
பைக்கின் பெட்ரோல் டேங்க் மற்றும் ஹெல்மெட்டிலும் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. பைக் ஓட்டுபவர் மது அருந்தியிருந்தால் ஹெல்மெட்டிலிலுள்ள சென்சார் கண்டறிந்து எச்சரிக்கும். மேலும், ஹெல்மெட்டை கழற்ற முயன்றால் பைக் எஞ்சின் தானாகவே ஆஃப் ஆகிவிடும்.
இதேபோன்று, பெட்ரோல் டேங்கில் மொபைல்போன் வைப்பதற்கான ஸ்டாண்ட் பொருத்தப்பட்டிருக்கிறது. பைக்கில் செல்லும்போது மொபைல்போனை எடுக்க முயன்றால், சென்சார் உதவியுடன் இயங்கும் இந்த சாதனம் பைக் எஞ்சினை ஆஃப் செய்து விடுகிறது.
இதுகுறித்து ஜெய் ராஜேஷ் கூறுகையில்,"குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, மொபைல்போன் பேசக்கூடாது என்று கூறி மக்களின் மனப் போக்கை மாற்றுவது கடினம்.
எனவே, பைக் விற்பனை செய்யும்போதே இந்த புதிய தொழில்நுட்பத்தை பொருத்திவிட்டால், இருசக்கர வாகன விபத்துக்களை கணிசமாக குறைக்க முடியும். கடந்த 6 மாத முயற்சியில் இந்த புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளேன். சென்சார்களுக்கு மட்டும் ரூ.6,000 செலவானது," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








