Om Banna Bullet Baba Temple History in Tamil: புல்லட் பாபா.. மோட்டார்சைக்கிளை தெய்வமாக வழிபடும் வினோதம்

புல்லட் பாபா என்று அழைக்கப்படும் இந்த வினோத கோயில் ஜோத்பூர்-பாலி நெடுஞ்சாலையில் உள்ள சோட்டிலா என்ற கிராமத்தில் உள்ளது. கடந்த 1991ம் ஆண்டு சோட்டிலா கிராமத்தை சேர்ந்த ஓம் பானா என்பவர் அருகிலுள்ள பாலி டவுனுக்கு சென்றுவிட்டு தனது புல்லட் மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
தற்போது கோயில் இருக்கும் இடம் அருகில் வந்தபோது சாலை ஓரம் இருந்த மரத்தில் மோதி புல்லட் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓம் பானா சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த போலீசார் விபத்துக்குள்ளான அந்த புல்லட் மோட்டார்சைக்கிளை போலீஸ் நிலையம் கொண்டு வந்து நிறுத்தினர்.
ஆனால், மறுநாள் காலை போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த மோட்டார்சைக்கிளை காணவில்லை. போலீசார் தேடியபோது, அது விபத்துக்குள்ளான இடத்திலேயே வந்து நின்றிருந்தது. யாரோ விளையாட்டுக்கு செய்துள்ளதாக நினைத்த போலீசார் அந்த மோட்டார்சைக்கிளை போலீஸ் நிலையத்திலேயே நிறுத்தினர்.
மேலும், மோட்டார்சைக்கிளிலிருந்து பெட்ரோலை எடுத்துவிட்டு, இரும்பு சங்கிலியை போட்டு கட்டிப் போட்டனர். ஆனால், மறுநாளும் மோட்டார்சைக்கிளை காணவில்லை. வழக்கம்போல் விபத்துக்குள்ளான இடத்திலேயே நின்றிருந்தது. இதனால், அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த போலீசார் பைக்கை அங்கேயே விட்டுவிட்டனர்.
இந்த செய்தி காட்டுத் தீ போல பரவியது. மேலும், அந்த இடத்தில் அடிக்கடி விபத்துக்களும் நிகழத் துவங்கின. இதையடுத்து, ஓம் பானாவுக்கும், புல்லட்டுக்கு அங்கு கோயில் அமைத்தனர். ஓம் பன்னாவின் படங்களை வைதததுடன், புல்லட் மோட்டார்சைக்கிளையும் பக்கத்திலேயே நிறுத்தி அதற்கும் பூஜை புனஷ்காரங்கள் ஆரம்பித்தன.
இதனால், அங்கு விபத்துக்கள் குறைந்ததாக அந்த ஊரை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஓம் பன்னா மோதிய மரத்துக்கும் பூஜைகள் நடக்கின்றன. அந்த வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் இந்த கோயிலில் நிறுத்திவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். மேலும், ஓம் பானாவுக்கும், புல்லட்டுக்கு மாலைகளை போட்டு வணங்கி செல்கின்றனர். ஓம் பன்னாவை "புல்லட் பாபா" என்று வழிபட்டு வருகின்றன்ர.
தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்ல ஆரம்பித்ததால், கோயில் அருகில் தற்போது பூஜை சாமான்கள் விற்கும் கடைகளும் பெருகிவிட்டன. அந்த கோயிலுக்கு வரும் டிரைவர்கள் மது பாட்டில்களோடு வந்து புல்லட் மோட்டார்சைக்கிள் மேல் இரண்டு மூன்று துளி மதுவை தெளித்துவிட்டு செல்வதும் வழக்கமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








