அக்டோபர் 11ல் புதிய தன்டர்பேர்டை அறிமுகப்படுத்தும் ராயல் என்பீல்டு

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மோட்டார்சைக்கிள்களுக்கு காத்திருப்பு காலம் அதிகம் உள்ளது. மேலும்,உற்பத்தி நெருக்கடியால் புதிய தன்டர்பேர்டு 500 அறிமுகத்தை ஓர் ஆண்டுக்கு ராயல் என்பீல்டு தள்ளிப்போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், பண்டிகை கால பட்டியலில் புதிய தன்டர்பேர்டு 500 மோட்டார்சைக்கிளும் இணைந்துள்ளது. வரும் 11ந் தேதி புதிய தன்டர்பேர்டை விற்பனைக்கு கொண்டு வருகிறது ராயல் என்பீல்டு. புதிய தன்டர்பேர்டு பல புதிய அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது.
புட் ரெஸ்ட்டுக்கு தகுந்தவாறு இருக்கையின் அமைப்பை மாற்றியுள்ளதோடு, ஸ்பிளிட் இருக்கைகளாகவும், திறந்துமூடும் வசதியையும் கொண்டிருக்கின்றன. பின் இருக்கையின் அடியில் பொருட்களை வைக்கும் இடவசதியும் இருக்கும்.
எளிதான கையாளுமைக்காக ஹேண்டில்பார் வடிவமைப்பு மாற்றம் கண்டுள்ளது. கண்ணாடிகளும் ஸ்டைலான வடிவமைப்பை பெற்றிருக்கிறது. பின்புறம் எல்இடி டேஞ்சர் லைட் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் கன்சோல் கொண்டிருக்கிறது.
புதிய தன்டர்பேர்டில் 55 வாட் திறன் கொண்ட 'லோ பீம்' புரொஜெக்டர் லைட்டும், 55 வாட் திறன் கொண்ட 'ஹை பீம்' வசதிகொண்ட ஹாலஜன் பல்பும் ஹெட்லைட்டில் பொருத்தப்பட்டிருக்கிறது. நீண்ட தூர ட்ரிப் செல்பவர்களுக்கு வசதியாக புதிய தன்டர்பேர்டு 20 லிட்டர் பெட்ரோல் டேங்குடன் வருகிறது.
இரண்டு சக்கரங்களிலும் பைப்ரி டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருப்பதால் கூடுதல் பாதுகாப்பை வழங்கும். 27.2 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 499 சிசி எஞ்சினுடன் வரும் தண்டர்பேர்டில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் ரூ.2 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








