இந்தியாவில் 3 பைக் ஷோரூம்களை திறக்கும் டிரையம்ப்

பிரிட்டனை சேர்ந்த டிரையம்ப் நிறுவனம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்தியாவில் பிரிமியம் மோட்டார்சைக்கிள் மார்க்கெட் நன்கு வளரந்து வருவதை கவனத்தில்க்கொண்டு டிரையம்ப் காலடி எடுத்து வைத்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி ஆட்டோ கண்காட்சியில் 7 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகப்படுத்தி மற்ற நிறுவனங்களை அதிர வைத்த டிரையம்ப் விரைவில் தனது ஷோரூம்களை திறக்க உள்ளது.
முதல் கட்டமாக டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் ஷோரூம்களை திறக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. சண்டிகரில் தனது 4வது ஷோரூமை திறக்கவும் டிரையம்ப் திட்டம் வைத்துள்ளது.
போனிவில்லி, ஸ்ட்ரீட் டிரிபிள் 675, ஸ்ட்ரீட் டிரிபிள் மற்றும் டேடோனா 675 ஆகிய 4 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அசெம்பிளிங் செய்து விற்பனை செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த பைக்குகள் எங்கு அசெம்பிளிங் செய்யப்படும் என்ற தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதுதவிர, ராக்கெட் 3 ரோட்ஸ்டெர், ஸ்டோர்ம் மற்றும் டைகர் 800 எக்ஸ்சி ஆகிய 3 மோட்டார்சைக்கிள் மாடல்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.
இந்தியாவை தனக்கு மிக முக்கியமான மார்க்கெட்டாக தெரிவித்துள்ள டிரையம்ப் அடுத்த இரண்டு ஆண்டுகளி்ல் மேலும் 12 பைக் ஷோரூம்களை திறக்கவும் திட்டம் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








