தமிழகத்தில் புதிய இருசக்கர வாகன ஆலை அமைக்க யமஹா முடிவு

ஜப்பானிய நிறுவனமான யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது வர்த்தக விரிவாக்கப் பணிகளை இந்தியாவில் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
புதிய மாடல்களை உற்பத்தி செய்வதற்கும் மற்றும் எதிர்கால தேவையை கருதியும், தனது உற்பத்தி திறனை வெகுவாக உயர்த்துவதற்காக புதிய ஆலையை கட்ட அந்த நிறுவனம் முடிவு செய்தது. கடந்த ஜனவரியில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் புதிய ஆலை கட்டுவதற்கான சாதக பாதகங்கள் குறித்து அந்த நிறுவனம் ஆய்வு செய்து வந்தது. இறுதியாக தற்போது தமிழகத்தில் புதிய ஆலை கட்டுவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.
தமிழகத்தில் புதிய ஆலை கட்டுவதற்கான இடத்தையும் யமஹா தேர்வு செய்யப்பட்டு விட்டதாக தமிழக அரசின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்து மேலும் விபரங்களை அவர் தெரிவிக்க மறுவிட்டார்.
வரும் மேமாதத்தில் புதிய ஆலை கட்டுவதற்காக யமஹா மற்றும் தமிழக அரசுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அவர் கூறினார். பெரும் முதலீட்டில் அமைக்கப்பட இருக்கும் இந்த புதிய ஆலை மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
உத்தரபிரதேசம் சூரஜ்பூர் மற்றும் ஹரியானா மாநிலம் பரிதாபாத் ஆகிய இடங்களில் ஏற்கனவே 2 ஆலைகளை அமைத்து யமஹா பைக் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அமையும் அந்த நிறுவனத்தின் 3 வது ஆலை அதன் முதல் தென் இந்தியாவில் அமையும் ஆலை என்பது குறி்ப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








