பாதுகாப்பான டிரைவிங்: மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கிய யமஹா
குர்கான்: இருசக்கர வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாமை யமஹா நடத்தியது.

அதிகரித்து வரும் வாகன விபத்துக்களுக்கு முறையான டிரைவிங் பயிற்சி பெறாததும், சாலை விதிமுறைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
இதை தவிர்க்கும் வகையில் இளைய தலைமுறையினருக்கு சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பாதுகாப்பாக இருசக்கர வாகனத்தை ஓட்டுவது குறித்தும் யமஹா நிறுவனம் நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு யமஹா சேஃப் ரைடிங் சயின்ஸ்(ஒய்எஸ்ஆர்எஸ்)சிறப்பு பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது.
கடந்த 2008ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த சிறப்பு பயிற்சி முகாம்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு பள்ளிக் கூடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. குர்கானில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
இதில், 200 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். யமஹாவின் சிறப்பு பயிற்றுனர்கள் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தனர். காலை முதல் பகுதியில் கற்பித்தல் வழி முறையில் சாலை விதிமுறைகள் குறித்து விரிவாக விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பிற்பகல் மாணவ, மாணவியருக்கு யமஹா டிடிஆர் 50 மற்றும் பிடபிள்யூ 50 ஆகிய சிறார்களுக்கான பைக்குகளில் பாதுகாப்பான டிரைவிங் யுக்திகள் குறித்து செயல்வழி பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த சிறப்பு முகாமில் துவக்கி வைத்து பேசிய யமஹா சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனைப் பிரிவு இயக்குனர் ஜுன் நகட்டா பேசுகையில்," இளைய வயதிலேயே சாலை விதிகள் மற்றும் டிரைவிங் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டால் அது பசு மரத்தாணி போல பதிந்துவிடும். எனவேதான் இந்த சிறப்பு பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறோம். விபத்தில்லா சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம்," என்றார்.
இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications








