ஏபிசி மோட்டார்சைக்கிள் நிறுவனம் பற்றிய தகவல்கள்
உலக அளவில் தனிநபர் பயன்பாட்டு வாகனத்தில் மோட்டார்சைக்கிள்தான் முன்னிலை வகிக்கின்றன. இதனால், நாளுக்கு நாள் மோட்டார்சைக்கிளின் தொழில்நுட்பங்கள் அசுர வேகத்தில் மேம்பட்டு வருகின்றன. ஆனால், துவக்க காலத்தில் மோட்டார்சைக்கிள்களின் தொழில்நுட்பம் மெதுவாகவே மேம்பட்டது.
கூகுள் மூளையும், கம்ப்யூட்டர் கரங்களும் இல்லாத அந்த நாட்களில் தங்களது சொந்த மூளையை மூலதனமாக்கி பல்வேறு பொறியாளர்கள் உருவாக்கிய மோட்டார் சைக்கிள்கள்தான் இன்றைய தொழில்நுட்பத்திற்கு ஆணிவேராக இருந்து வருகிறது. துவக்க காலகட்டத்தில் இதுபோன்று மோட்டார்சைக்கிளுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியதில் ஏபிசி.,யும் ஒன்று. 1914ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தை பற்றிய சில விபரங்களையும், அந்த நிறுவனம் தயாரித்த மோட்டார்சைக்கிள்களின் படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

ஸ்தாபிதம்
1914ல் ரோனால்டு சார்டெரிஸ் என்பவரால் துவங்கப்பட்டது. பல பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் ஏபிசி., என்ற எழுத்துக்களை பெயராக வைத்து முளைத்தன. அதில், இந்த ஏபிசி., மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமும் ஒன்று. விமான தயாரிப்பில் ஈடுபட்டு வந்த இந்த நிறுவனம் திடீரென மோட்டார்சைக்கிள் தயாரிப்புக்கு மாறியது. கிரான்வில்லி பிராட்ஷா என்ற பிரபல எஞ்சினியருடன் இணைந்து ரோலால்டு சார்டெரிஸ் 1918ம் ஆண்டிலேயே 500சிசி மோட்டார்சைக்கிளை உருவாக்கினார். சிலிண்டர்கள் அனைத்தும் மோட்டார்சைக்கிளின் ஃபிரேமில்தான் பொருத்தப்பட்டிருந்தன.

ஏபிசி ஸ்கூட்டர்
மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி ஸ்கூட்டர் மாடலையும் ஏபிசி., தயாரித்தது. 1919ல் ஸ்கூட்டமோட்டா என்ற பெயரில் இந்த ஸ்கூட்டர் வந்தது.

காப்புரிமை பிரச்னை
டிசைனை காப்பியடிப்பதையும், தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும் ஏற்படும் பிரச்னை தொன்றுதொட்ட வழக்கமாக இருந்து வருகிறது. தனது காப்புரிமை பெற்ற எஞ்சின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக பிஎம்டபிள்யூ மீது 1926ல் கிரான்வில்லி பிராட்ஷா வழக்குத் தொடர்ந்தார்.

வித்து
ஏபிசி நிறுவனம் 1919ம் ஆண்டு 398சிசி மோட்டார்சைக்கிள் ஒன்றை லண்டனில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தது. இந்த மோட்டார்சைக்கிள்தான் இன்றைய மோட்டார்சைக்கிள் தொழில்நுட்பத்துக்கு விதையாக கருதப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் டிரம் பிரேக்குகள், ஸ்பிரிங் இருக்கைகள், 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. படுக்கைவாட்டு எஞ்சின் கொண்ட இந்த பைக் 110 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அஸ்தமனம்
விமானங்களுக்கான எஞ்சின் தயாரிப்பதைவிட மோட்டார்சைக்கிளை தயாரிப்பதற்கு அதிக செலவீனம் ஏற்பட்டதால் தாக்குப் பிடிக்க முடியாத ஏபிசி 1923ல் மோட்டார்சைக்கிள் உற்பத்தியை நிறுத்தியது. இருப்பினும், அந்த நிறுவனம் ஏற்படுத்திய ஏபிசி தொழில்நுட்பங்கள் இன்றைய மோட்டார் வாகன தொழில்நுட்பத்துக்கு அகர முதல எழுத்தாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications








