ஆண்டுக்கு 4 இருசக்கர வாகன மாடல்கள் அறிமுகம்: ஹோண்டா அறிவிப்பு

ஹரியானா மாநிலம், மானேசரில் ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைந்துள்ளது. தற்போது இந்த ஆய்வு மையம் ஒருங்கிணைந்த வசதிகள் கொண்டதாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த ஆராய்ச்சி மையத்தின் மூலம் இந்தியாவுக்கேற்ற பல புதிய மாடல்களை தயாரித்து அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வு மையத்தில்தான் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆக்டிவா உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும் வகையில் மேம்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், ஆண்டுக்கு 4 புதிய மாடல்களை இந்த ஆய்வு மையத்தின் மூலம் வடிவமைத்து அறிமுகப்படுத்த உள்ளதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிதாக அறிமுகமாகும் மாடல்களில் சில மாடல்கள் மேம்படுத்தப்பட்டவையாகவும், சில மாடல்கள் புதிய மாடல்களாகவும் இருக்கும். இதுதவிர, இந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உலக அளவில் ஹோண்டாவின் முக்கிய ஆராய்ச்சி மையமாகவும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தும் பணிகள் மற்றும் புதிய மாடல்களை தயாரிப்பது தவிர சர்வதேச அளவில் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் மையமாகவும் இது செயல்படும் என ஹோண்டா தெரிவித்துள்ளது. ஒட்டு மொத்தத்தில் இந்த புதிய மையம் மூலம் ஹோண்டாவிடமிருந்து இந்தியாவுக்கு ஏராளமான புதிய மாடல்கள் கிடைப்பது உறுதியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








