2016ல் நாங்கதான் நம்பர்-1: மார்தட்டும் ஹோண்டா டூவீலர்ஸ்!

ஹீரோ ஹோண்டாவிலிருந்து பிரிந்த பின் தனது வர்த்தக நடவடிக்கைகளை படு தீவிரமாக்கியிருக்கிறது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம். இதற்கு கைமேல் பலனாக 5 இடத்திலிருந்து ராக்கெட் வேகத்தில் தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறிவிட்டது.
ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான நடப்பு நிதி ஆண்டில் 23.67 லட்சம் இருசக்கர வாகனங்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. அதேவேளை, இரண்டாம் இடத்தில் இருந்து வந்த பஜாஜ் ஆட்டோ 22.82 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்ததால் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், சிபி டிரிக்கர் பைக் அறிமுக விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அதிகாரி சின்ஜி அயோமா கூறியதாவது," இந்தியாவில் ஆண்டுக்கு 1.4 கோடி இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின்றன.
விற்பனை வளர்ச்சியில் அதிக மாற்றங்கள் இல்லாமல், இதே நிலை நீடித்தால் 2015-16 நிதி ஆண்டில் நாங்கள் நம்பர்-1 இடத்தை பிடித்துவிடுவோம். மேலும், ஹீரோவின் விற்பனை பற்றி கவலை இல்லை. பஜாஜ் ஆட்டோவை மட்டுமே நேரடி போட்டியாளராக கருதுகிறோம். சிறந்த கூட்டணிகளை அந்த நிறுவனம் பெற்றுள்ளதோடு, வலுவான வர்த்தகத்தையும் வைத்துள்ளது," என்றார்.
இதனிடையே, முதலிடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை ஹோண்டா தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டில் புதிதாக 4 மாடல்களை களமிறக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








