சென்னை, ஓரகடத்தில் ராயல் என்பீல்டின் புதிய ஆலை திறப்பு: வெயிட்டிங் பீரியட் குறையுமா?
சென்னை, ஓரகடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ராயல் என்பீல்டின் புதிய ஆலையில் மோட்டார்சைக்கிள் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. இதனால், காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஷர் குழுமத்தின் அங்கமான ராயல் என்பீல்டு நிறுவனம் சென்னையில் ஆலை அமைத்து மோட்டார்சைக்கிள் உற்பத்தி செய்து வருகிறது. ஆனால், தேவைக்கு தகுந்த அளவில் அந்த ஆலையின் உற்பத்தி திறன் இல்லாததால், ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கான காத்திருப்பு காலம் வெகுவாகவே அதிகமாக இருந்து வந்தது.
இதனை குறைக்கும் விதமாக தற்போது ஓரகடத்தில் புதிய ஆலையை அந்த நிறுவனம் அமைத்துள்ளது. கடந்த புதன் கிழமை இந்த ஆலை திறக்கப்பட்டது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்தார்த் லால் இந்த புதிய தொழிற்சாலையை திறந்து வைத்தார். ரூ.150 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய தொழிற்சாலையில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்ய முடியும்.
50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த தொழிற்சாலையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இரண்டரை லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்ய ராயல் என்பீல்டு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த புதிய தொழிற்சாலையில் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதையடுத்து ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கான காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








