விசேஷ அம்சங்களுடன் மும்பை போலீஸுக்கு ரோந்து மோட்டார்சைக்கிள்!

வர்த்தக தலைநகராக திகழும் மும்பை மாநகரத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது. மேலும், தீவிரவாத அச்சுறுத்தலும் இருந்து வருகிறது. இதனால், கண்காணிப்பு பணிகளை மும்பை போலீசார் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதற்காக, நவீன வசதிகள் கொண்ட மோட்டார்சைக்கிள்களை வாங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் நவீன தொடர்பு வசதிகள் கொண்ட மோட்டார்சைக்கிள்கள் ரோந்து பணிகளில் போலீசார் பயன்படுத்துகின்றனர். இதேபோன்று, கஸ்டமைஸ் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளை பயன்படுத்த மும்பை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மும்பையை சேர்ந்த ரோடு ரேஜ் கஸ்டம் நிறுவனத்தின் உரிமையாளர் கேப்ரியல் ஸுஸார்ட்டே மும்பை போலீசாருக்காக விசேஷ அம்சங்கள் கொண்டதாக ராயல் என்பீல்டு புல்லட் மோட்டார்சைக்கிளை வடிவமைத்து தர இருக்கிறார். அனைத்து காலநிலைகளிலும் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்ட கேமரா மோட்டார்சைக்கிளின் முன்புறத்திலும், பின்புறத்திலும் பொருத்தப்பட்டிருக்கும்.
ஜிபிஎஸ் தொடர்பு வசதியும், போக்குவரத்து விதிமீறபவர்களுக்கு ஸ்பாட் ஃபைன் விதிக்கும்போது உடனே ரசீது கொடுப்பதற்காக லேப்டாப் மற்றும் பிரின்ட்டர் ஆகியவையும் இருக்கும். இவை தவிர, தடயவியல் சோதனைக்கான அடிப்படை கருவிகளும் இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும்.
முதலுதவி சிகிச்சை பெட்டி, கூடுதல் பேட்டரி மற்றும் இதர கருவிகள், ஆயுதங்களும் இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும். மொத்தத்தில் அவசர சமயங்களில் விரைவாக சென்று நிலைமை உணர்ந்து செயல்படும் அத்துனை அம்சங்களுடன் இந்த மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த மோட்டார்சைக்கிளின் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்த மோட்டார்சைக்கிள் மும்பை போலீசார் சோதனை அடிப்படையில் பயன்படுத்த உள்ளனர். இந்த மோட்டார்சைக்கிள் வெற்றியடைந்தால், அரசு அனுமதி பெற்று அதிக அளவில் இந்த மோட்டார்சைக்கிளை களமிறக்க மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








