நவம்பர் 28ல் அறிமுகமாகிறது டிரையம்ஃப் பைக்குகள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அடுத்த மாதம் 28ந் தேதி முதல் டிரையம்ஃப் பைக்குகள் விற்பனைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட டிரையம்ஃப் பைக்குகள் மிகுந்த கால தாமத்திற்கு பின் தற்போது விற்பனைக்கு வரும் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஆலை
ஹரியானாவில் டிரையம்ஃப் பைக்குகளுக்கான புதிய அசெம்பிளிங் ஆலை அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட சுமையை இந்த ஆலையை வைத்து டிரையம்ஃப் சமாளிக்கும். பின்னர், பெங்களூர் அருகே நரசப்புராவில் அமைக்கப்பட்டு வரும் புதிய ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டவுடன் முழு அளவிலான விற்பனை மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த டிரையம்ஃப் திட்டமிட்டுள்ளது.

அசெம்பிள் பைக்குகள்
பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குனராக இருந்த விமல் சம்பிளி தற்போது டிரையம்ஃப் பைக் நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்கு தலைமை ஏற்றுள்ளார். இந்த நிறுவனமும் முதலில் பைக்குகளை அசெம்பிள் செய்து விற்பனை செய்யவும், பின்னர் சில மாடல்களை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

குறைந்த விலை பைக்குகள்
இந்தியாவில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக குறைந்த சிசி திறன் மற்றும் குறைந்த விலை கொண்ட மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க டிரையம்ஃப் திட்டமிட்டுள்ளது. இதற்காக, புதிய பைக் மாடலையும் வடிவமைத்து சோதனை நடத்தி வருவது பற்றி சமீபத்தில் செய்தி வழங்கியிருந்தோம் என்பது நினைவுகூறத்தக்கது.

விலை
என்ட்ரி லெவல் டிரையம்ஃப் பைக்குகள் ரூ.5 லட்சம் முதல் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்காக உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படும் பைக் மாடல் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடும் போட்டி
டிரையம்ஃப் நிறுவனம் புதிய 250சிசி பைக்கை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது தெரிந்தது. இந்த நிலையில், 250சிசி மார்க்கெட்டில் பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை விரைவில் களமிறக்க உள்ளன. உள்நாட்டு நிறுவனங்கள் கடும் சவாலான விலையில் பைக்குகளை களமிறக்கும் என்பதால் இந்த செக்மென்ட்டில் கடும் போட்டி ஏற்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








