250சிசி-500சிசி செக்மென்ட்டில் வரும் புதிய பைக் மாடல்கள்
இந்திய வாடிக்கையாளர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக பவர்ஃபுல் பைக்குகளின் மீது திரும்பியுள்ளது. ஆனால், ஹோண்டா சிபிஆர் 250ஆர், கவாஸாகி நின்ஜா 300, ஹயோசங் ஜிடி250ஆர் பைக்குகளின் ஆதிக்கத்தில் இருக்கும் 250சிசி செக்மென்ட்டை விட்டால் அடுத்து 500சிசிக்கும் மேலே திறன் கொண்ட பைக்குகள்தான் தற்போது விற்பனையில் இருக்கின்றன.
இதனால், 250சிசி-500சிசி பிரிவுகளுக்கு இடையில் அடுத்தடுத்து புதிய பைக்குகளை களமிறக்க நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன. இதனால், இந்த பைக் செக்மென்ட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போட்டி அதிகரிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இந்த செக்மென்ட்டில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய பைக் மாடல்கள் பற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹோண்டா சிபிஆர்400ஆர்
இந்தியாவில் ஹோண்டாவின் சிபிஆர் வரிசை பைக்குகள் மிக வலுவான மார்க்கெட்டை பெற்றிருப்பதுடன், தலைமைத்துவத்தையும் வகித்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது சிபிஆர் 400ஆர் பைக்கை விற்பனைக்கு கொண்டு வர ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் 45.35 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். ரூ.3.5 லட்சம் விலையில் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா மோஜோ
இருசக்கர வாகன சந்தையில் எப்படியாவது ஸ்திரமான இடத்தை பிடித்து விடும் துடிப்பில் இருக்கும் மஹிந்திராவின் இருசக்கர வாகன தயாரிப்பு பிரிவு விரைவில் மோஜோ என்ற 300சிசி பைக்கை களமிறக்குகிறது. இத்தாலியை சேர்ந்த எஞ்சின் எஞ்சினியரிங் நிறுவனத்தின் துணையுடன் இந்த பைக்கை மஹிந்திரா டிசைன் செய்துள்ளது. இந்த பைக்கும் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர இருக்கிறது.

கேடிஎம் டியூக் 390
இந்த செக்மென்ட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பைக் மாடல் இதுதான். இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 375சிசி எஞ்சின் 43 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். டியூக் 390 பைக்குக்கான ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பாஷ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட உள்ளது. மேலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துக்காக பிரத்யேக இசியூ யூனிட்டும் பொருத்தப்பட உள்ளது. முன் மற்றும் பின் சக்கரங்களின் சுழற்சி வேகத்தை சென்சார்கள் மூலம் உணர்ந்து இந்த பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பாக வேலை செய்யும் என்பதால் கூடுதல் பாதுகாப்பை தரும். ரூ.2 லட்சம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஜாஜ் பல்சர் 390
மிட் ரேஞ்ச் பைக் மார்க்கெட்டில் குதிக்கும் விதமாக பல்சர் வரிசையில் புதிய 375சிசி பைக்கை பஜாஜ் ஆட்டோ அறிமுகப்படுத்த உள்ளது. கேடிஎம் டியூக் 390 பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 45 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த ஆண்டு இறுதி வாக்கில் அறிமுகமாக இருக்கும் இந்த பைக் கேடிஎம் டியூக் 390 பைக்கைவிட ரூ.25,000 குறைவான விலையில் வரும் என தகவல்கள் கூறுகின்றன.

சுஸுகி இனசுமா
சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனமும் வாடிக்கையாளர்களின் மனதை குறிப்பறிந்து தனது புதிய இனசுமா 250சிசி பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் 248சிசி எஞ்சின் 26 பிஎச்பி பவரையும், 24.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

யமஹா ஒய்இசட்எஃப் 25
ஒருநேரத்தில் யமஹாவின் ஆர்15 150சிசி பைக்தான் இந்திய இளசுகளின் கனவு பைக்காக இருந்து வந்தது. ஆனால், ஹோண்டா சிபிஆர்250ஆர், கவாஸாகி நின்ஜா 250ஆர் பைக்குகள் வந்தபின்பு யமஹா ஆர்15 பைக்குக்கான மவுசு குறைந்து போய்விட்டது. எனவே, புதிய 250சிசி பைக்கை யமஹா அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. யமஹா ஒய்இசட்எஃப் 25 என்ற அந்த புதிய பைக்கை இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு யமஹா முடிவு செய்துள்ளது. ஸ்டைல், பெர்ஃபார்மென்ஸ் என அனைத்திலும் கலக்கலாக களமிறங்கப் போகும் இந்த புதிய பைக் யமஹாவின் விற்பனைக்கு புதிய உத்வேகம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஎம் ஆர்சி 250ஆர்
பஜாஜ் கூட்டணி நிறுவனமான கேடிஎம் தனது டியூக் 390க்கு பிறகு மூன்றாவது மாடலாக ஆர்சி 250ஆர் ரேஸ் பைக்கையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய ரேஸ் பைக் விற்பனைக்கு வரும் என தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








