இந்த ஆண்டு வேர்ல்டு சூப்பர் பைக் பந்தயமும் ரத்து: ரசிகர்கள் அதிர்ச்சி
வரும் நவம்பரில் இந்தியாவில் நடைபெற இருந்த சர்வதேச சூப்பர் பைக் பந்தயமும் ரத்து செய்யப்பட்டுள்ளது மோட்டார்ஸ்போர்ட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபார்முலா- 1 பந்தயங்கள் போன்றே உலக அளவில் வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் மிகவும் புகழ்வாய்ந்த மோட்டார் பந்தயமாக விளங்குகிறது. இந்த நிலையில், அக்டோபரில் ஃபார்முலா- 1 கார் பந்தயங்களை தொடர்ந்து, நவம்பரில் சர்வதேச சூப்பர் பைக் பந்தயம் இந்தியாவில் நடைபெற இருந்தன.

கடந்த மார்ச் மாதமே சர்வதேச சூப்பர் பைக் பந்தயம் டெல்லி அருகே நொய்டாவில் உள்ள பந்தய களத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், முன்னேற்பாடுகளுக்கு போதிய அவகாசம் இல்லாததால், வரும் நவம்பர் மாதம் 17ந் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததும், போட்டியை நடத்துவதற்கான வசதிகள் குறைவாக இருப்பதால் நவம்பரில் நடைபெற இருந்த வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் ரத்து செயய்ப்படுவதாக வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் சர்வதேச கூட்டமைப்பான எஃப்ஐஎம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு இந்தியாவில் ஃபார்முலா- 1 கார் பந்தயம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பெரிதும் ஆவலைத் தூண்டியிருந்த வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது நம் நாட்டு மோட்டார்ஸ்போர்ட்ஸ் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டும் சர்வதேச சூப்பர் பைக் பந்தயம் இந்தியாவில் நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், 2015ம் ஆண்டில்தான் இந்தியாவில் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








