'மேட் இன் இந்தியா' குறைந்த விலை பைக் சென்னையில் உற்பத்தி: யமஹா அறிவிப்பு
சென்னையில் அமைக்கப்பட இருக்கும் புதிய இருசக்கர வாகன ஆலையில் குறைந்த விலை பைக் மற்றும் புதிய ஸ்கூட்டர் மாடல் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக யமஹா தெரிவித்துள்ளது. அதேவேளை, பொருளாதார சுணக்க நிலை காரணமாக சென்னை இருசக்கர வாகன ஆலை அமைப்பதற்கான பணிகளை ஓர் ஆண்டு தாமதப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை அருகில் வல்லம்-வடகல் தொழிற் பூங்காவில் இந்த புதிய தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மேமாதம் தமிழக அரசுக்கும்- யமஹா நிறுவனத்துக்கு இடையில் இந்த புதிய ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

உற்பத்தி இலக்கு
2020ல் ஆண்டுக்கு 50 லட்சம் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் இலக்குடன் யமஹா நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக, சென்னையில் தனது மூன்றாவது புதிய இருசக்கர வாகன ஆலையை யமஹா அமைக்கிறது.

முதலீடு
ரூ.1,500 கோடி முதலீட்டில் 4,44,000 சதுர மீட்டர் பரப்பில் இந்த புதிய ஆலை அமைக்கப்பட உள்ளது.

உற்பத்தி திறன்
பைக் மற்றும் ஸ்கூட்டர் என இரண்டு வகை இருசக்கர வாகனங்களும் இந்த புதிய ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. முதலில் 4.5 லட்சம் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த புதிய ஆலை அமைக்கப்படும். பின்னர், ஆண்டுக்கு 18 லட்சம் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக மேம்படுத்தப்படும்.

குறைந்த விலை பைக்
மேலும், 2016ம் ஆண்டில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட புதிய ஸ்கூட்டர் மற்றும் குறைந்த விலை பைக் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் யமஹா தெரிவித்துள்ளது. இதுதவிர, ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இந்த மாடல்களை ஏற்றுமதி செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய ஸ்கூட்டர்
குறைந்த விலை பைக் தவிர இந்தியாவிலேயே வடிவமைக்கப்படும் ஸ்கூட்டரை 2016ல் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது யமஹா. குறைந்தது 4 ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாக யமஹாவின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனர் ஹிரோயுகி சுஸுகி தெரிவித்துள்ளார்.

ஹை என்ட் பைக்
உயர் ரக பைக்குகளும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஹிரோயுகி, அதற்கு வாய்ப்பு இல்லை என்றும், அந்த பணிகளை சர்வதேச ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு மட்டுமே மேற்கொள்ளும் என்றும், குறைந்த விலை பைக்குகளை மட்டும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆலை பணிகள் துவங்கியது
சென்னை ஆலைக்கான பணிகளை யமஹா தற்போது துவங்கியுள்ளது. அடுத்த ஆண்டு பிற்பகுதியில் பணிகள் நிறைவு பெறும் என்று தெரிகிறது.

வேலைவாய்ப்பு
சென்னையில் அமைக்கப்படும் புதிய ஆலையின் மூலம் 3,000 பேருக்கு நேரடியாகவும், 20,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








