இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்தை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு!
இருசக்கர வாகனங்களுக்கு ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்தை கட்டாயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நம் நாட்டில் இதர வாகன வகைகளைவிட இருசக்கர வாகனங்களால் நடைபெறும் விபத்துக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இந்தநிலையில், சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்குவது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்," ஐரோப்பிய யூனியன் உள்பட வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் சாலை பாதுகாப்பு மற்றும் வாகன விதிகளின் அடிப்படையில் நம் நாட்டில் பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.
ஆனால், இந்த விதிமுறைகளை உடனடியாக அமலுக்கு கொண்டு வருவதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. எனவே, படிப்படியாக விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். மேலும், ஐரோப்பாவில் 2016- 17 ஆண்டு முதல் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட உள்ளது.
அதேவழியில் இந்தியாவிலும் இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்தை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் அதிக சக்திவாய்ந்த பைக்குகளிலும், பின்னர் படிப்படியாக குறைந்த சிசி கொண்ட இருசக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்தை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது," என்று கூறினார்.
இருசக்கர வாகனங்கள், கார்கள் மட்டுமின்றி, பஸ், டிரக் உள்ளிட்ட கனரக வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனிடையே, புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னணி வகிக்கும் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர்180 பைக்கில் ஏபிஎஸ் சிஸ்டம் கொண்ட மாடலை ஏற்கனவே விற்பனைக்கு அறிமுகம் செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஏபிஎஸ்... அப்படீன்னா என்ன?
ஆங்கிலத்தில் Anti Lock Braking System என்பதை சுருக்கமாக ABS என்று குறிப்பிடுகின்றனர். திடீரென பிடிக்கும்போது வாகனத்தின் டயர்கள் சறுக்கி சென்று விபத்தில் சிக்கிவிடும் நிலை ஏற்படுகிறது. இல்லாவிட்டால், பிரேக் ஷூக்கள் லாக் ஆகி, காரின் பேலன்சை குறைந்து நிலைதடுமாற செய்கிறது.

இந்த பிரச்சினைக்கு அருமருந்தான புதிய தொழில்நுட்பம்தான் ஏபிஎஸ். திடீரென பிரேக் பிடிக்கும்போது, சக்கரங்களுக்கு சீரான இடைவேளையில் பிரேக்கிங் திறனை செலுத்தி சக்கரங்கள் சறுக்காதவாறு வாகனத்தை நிறுத்துவதுதான் ஏ.பி.எஸ்., தொழில்நுட்பம்.
ஏபிஎஸ் இல்லாத வாகனங்களில் திடீரென பிரேக் பிடித்து நிறுத்துவதைவிட, ஏ.பி.எஸ்., தொழில்நுட்பம் வாகனத்தை சில மீட்டர் முன்னதாகவே நிறுத்திவிடும் என்பதும் இதன் விஷேசம். மழைக்காலங்களில் ஈரப்பதமான சாலைகளில் செல்லும்போதும், பிரேக் பிடித்தால் வாகனத்தின் சக்கரங்கள் சறுக்காதவாறு ஏ.பி.எஸ்., பார்ததுக் கொள்ளும்.


Click it and Unblock the Notifications








