டிஎஸ்கே- பெனெல்லி கூட்டணியில் 5 புதிய பைக்குகள் அறிமுகம்!
இத்தாலியை சேர்ந்த பெனெல்லி பிராண்டு பிரிமியம் பைக்குகளை இந்தியாவில் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ்- பெனெல்லி கூட்டணி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே ஹயோசங் பிரிமியம் பைக்குகளை விற்பனை செய்து வரும் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் தற்போது இத்தாலிய நிறுவனமான பெனெல்லி பிரிமியம் பைக்குகளையும் இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளது.
ஆனால், பெனெல்லி பைக்குகளுக்கு தனியாக ஷோரூம்களை அமைக்க இருப்பதாக டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சரியான சமயத்தில் கால் பதித்துள்ளதாக பெனெல்லி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாடல்கள்
இந்தியாவில் தனது அனைத்து மாடல்களையும் விற்பனைக்கு கொண்டு இருப்பதாக பெனெல்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெனெல்லி நிறுவனத்திடம் 300சிசி முதல் 1,131சிசி வரையிலான மாடல்கள் உள்ளன.

அசெம்பிள்
மஹாராஷ்டிர மாநிலம், சதாராவில் உள்ள டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பெனெல்லி பைக்குகள் அசெம்பிள் செய்யப்பட உள்ளன. முதலில் உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்படும். பின்னர் படிப்படியாக இந்தியாவிலேயே அதிக அளவில் உதிரிபாகங்களை சப்ளை பெற்று பைக்குகளை தயாரிக்க இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது.

5 மாடல்கள்
டிசம்பரில் 5 புதிய பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக டிஎஸ்கே- பெனெல்லி கூட்டணி தெரிவித்துள்ளது. ஒரு 300சிசி பைக், இரண்டு 600சிசி பைக், ஒரு 899சிசி பைக் மற்றும் 1,130சிசி பைக் மாடல்கள் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. பின்னர், தனது அனைத்து மாடல்களையும் இந்தியாவில் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கைவசம் உள்ள மாடல்கள்
பெனெல்லி நிறுவனத்திடம் தற்போது பிஎன் 302, பிஎன் 600ஆர், பிஎன் 600எஸ், பிஎன் 600ஜிடி, டிஎன்டி 899, டிஆர்இ 1130, டிஎன்டி 1130ஆர் மற்றும் டிஆர்இ 1130 கே அமேசோனாஸ் ஆகிய மாடல்கள் இருக்கின்றன. இதில், பிஎன்302 என்ற மாடல்தான் பெனெல்லி தயாரிப்புகளில் குறைவான விலை கொண்ட மாடல். இது கேடிஎம் ஆர்சி390, கவாஸாகி நின்ஜா300 போன்ற பைக் மாடல்களுடன் போட்டியிடும்.

புதிய ஷோரூம்கள்
வரும் டிசம்பர் 24ந் தேதி இந்தியாவில் 12 புதிய ஷோரூம்களை திறக்க டிஎஸ்கே- பெனெல்லி கூட்டணி திட்டமிட்டுள்ளது.

125சிசி பைக்
எதிர்காலத்தில் புதிய 125சிசி மற்றும் 150சிசி பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவும் டிஎஸ்கே- பெனெல்லி கூட்டணி திட்டமிட்டுள்ளது. மேலும், ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் கூட்டாக செயல்பட்டதைவிட அதிக காலம் டிஎஸ்கே நிறுவனத்துடன் எங்களது கூட்டு தொடரும் என பெனெல்லி கூறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








