ரூ.1,450 கோடியில் கர்நாடகாவில் புதிய ஆலை அமைக்கும் ஹீரோ!
ஹீரோ மற்றும் ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனங்கள் தனித்தனியாக பிரிந்தவுடன் போட்டி போட்டு வர்த்தக விரிவாக்கப் பணிகளை செய்து வருகின்றன.
இரு நிறுவனங்களும் பல புதிய திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. மேலும், ஹீரோவின் நம்பர்-1 இடத்தை பிடிக்கவும் ஹோண்டா பெரிய அளவிலான முதலீட்டுத் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதற்கு போட்டியாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் வர்த்தக விரிவாக்கத் திட்டங்களை கோடிகோடியாய் கொட்டி செய்து வருகிறது.

உள்நாடு, வெளிநாடுகளில் தனது வர்த்தக கரத்தை வலுப்படுத்துவதற்கு மிகப்பெரிய திட்டங்களை வகுத்துள்ளது. சமீபத்தில் கொலம்பிய நாட்டில் புதிய ஆலையை அமைக்க அடிக்கல் நாட்டிய கையோடு, இந்தியாவிலும் ஒரு புதிய ஆலையை அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.
அந்த புதிய ஆலை தென்னிந்தியாவில் அமைய இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான். இந்த நிலையில், வட கர்நாடகத்திலுள்ள, தார்வாட் மாவட்டத்தில் மும்மிகட்டி என்ற இடத்தில் புதிய இருசக்கர வாகன ஆலையை ஹீரோ மோட்டோகார்ப் அமைக்க இருக்கிறது.
300 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,450 கோடி முதலீட்டில் இந்த புதிய ஆலை அமைக்கப்பட உள்ளது. ஆண்டுக்கு 18 லட்சம் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும், இந்த புதிய ஆலை மூலம் கர்நாடகாவில் ஆயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
புதிய ஆலைக்காக 500 ஏக்கர் நிலத்தை வழங்குமாறு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கர்நாடக அரசிடம் கோரியிருந்தது. ஆனால், 300 ஏக்கர் நிலத்தை மட்டும் அம்மாநில அரசு வழங்கியுள்ளது. மேலும், ஆலைக்கு தேவையான மின்சாரம் மற்றும் நீர் ஆகியவற்றை வழங்குவதாகவும் கர்நாடக அரசு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








