ஹீரோ புதிய ஆலையை கவர்வதற்கு தெலங்கானா, ஆந்திரா இடையில் பங்காளி யுத்தம்!
தென்னிந்தியாவில் புதிய இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது. புதிய ஆலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கான முயற்சிகளையும் அந்த நிறுவனம் துவங்கியுள்ளது.
இந்த நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய ஆலையை தங்களது மாநிலத்தில் கொண்டு வருவதற்காக தெலங்கானா அரசும், ஆந்திராவும் கோதாவில் குதித்துள்ளன. இதற்காக, இரு மாநில அரசுகளும் பல கவர்ச்சிகர சலுகைகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.

தமிழகத்தை ஒட்டியுள்ள ஆந்திர தொழிற்பேட்டை பகுதியான ஸ்ரீசிட்டியில் புதிய ஆலை அமைப்பதற்கான இடத்தை வழங்குவதாக ஆந்திர அரசும், மேடக் மாவட்டத்தில் மஹிந்திரா டிராக்டர் ஆலைக்கு அருகில் புதிய ஆலை அமைக்க இடம் வழங்குவதாக தெலங்கானா அரசும் ஹீரோவிடம் உறுதியளித்துள்ளன.
ஒரு படி மேலே போன ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் பவன் முஞ்சாலிடம் போனை போட்டு பேசி சலுகைகளை தாராளமாக வழங்குவதாக கூறியுள்ளார்.
இதனிடையே, தென் இந்தியாவில் புதிய ஆலை அமைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் பல்வேறு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications








