ஹோண்டா சிபிஆர் 150ஆர் பைக்கின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஹோண்டா சிபிஆர் 150ஆர் பைக் இந்தோனேஷியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் மற்றும் எஞ்சினில் சிறிய மாற்றங்களை செய்து புதிய மாடலை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய பைக் மாடல் நம் நாட்டு இளைஞர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டியுள்ளது. இந்த புதிய சிபிஆர் 150ஆர் பைக்கை பற்றிய கூடுதல் தகவல்களையும், படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

ஸ்டைல்
ஹோண்டா சிபிஆர் 300ஆர் பைக்கில் இருப்பது போன்ற ஃபேரிங் ஸ்டைல், புதிய முப்பரிமாண டிரஸ் ஃப்ரேம், ப்ரோ லிங்க் சஸ்பென்ஷன் போன்ற அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

டூவல் ஹெட்லைட்
இரட்டை ஹெட்லைட்டும் முக்கிய மாற்றமாக கூறலாம். ஃபுட்ரெஸ்ட், எக்ஸ்சாஸ்ட் டிசைன் போன்றவற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

எஞ்சின்
அதே 149.4சிசி எஞ்சின்தான் புதிய மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், டியூனிங் செய்து ஆற்றல் வெளிப்படுத்தும் திறன் சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது. பழைய மாடலின் எஞ்சின் 17.8 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது. புதிய மாடல் 17.1 பிஎஸ் பவர் கொண்டதாக வந்துள்ளது. அதேவேளை, சிறிதளவு கூடுதல் டார்க்கை அளிக்கும் விதத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 7,500ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்தில் 13 என்எம் டார்க்கை அளிக்கும்.

இந்தியாவுக்கு எப்போது?
புதிய மாடல் யூரோ-3 மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்கள் கொண்டதாக வந்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் மேம்படுத்தப்பட்ட யமஹா ஆர்15 மற்றும் புதிய பல்சர் 200எஸ்எஸ் பைக் மாடல்களுடன் இது நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








