பீஜோ ஸ்கூட்டர் பிரிவை கையகப்படுத்தும் மஹிந்திரா!
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ வாகன தயாரிப்பு குழுமத்தை சேர்ந்த பீஜோ மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை மஹிந்திரா நிறுவனம் கையகப்படுத்த உள்ளது.
உலகின் மிக பழமையான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பீஜோ கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை விற்பனை செய்ய பிஎஸ்ஏ குழுமம் முடிவு செய்தது.

இந்தநிலையில், பீஜோ மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வாங்குவதற்கு இந்தியாவின் மஹிந்திரா வாகன தயாரிப்பு குழுமம் இசைந்துள்ளது. ரூ.217 கோடி மதிப்புடைய பங்குகளை மஹிந்திரா நிறுவனம் கையகப்படுத்த உள்ளது.
இதன்மூலம், பீஜோ மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பு தொழில்நுட்பத்தை மஹிந்திரா பயன்படுத்திக் கொள்ள முடியும். இதேபோன்று, ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் பீஜோவின் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் மூலமாக தனது இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யவும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
இதுதவிர, இந்தியாவில் பீஜோ ஸ்கூட்டர்கள் மற்றும் மொபட் மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தற்போது பீஜோ மோட்டார்சைக்கிள் நிறுவனத்திடம் 50சிசி முதல் 400சிசி வரையிலான எஞ்சின்கள் கொண்ட ஸ்கூட்டர் மற்றும் மொபட் மாடல்கள் உள்ளன.
அடுத்த மூன்று மாதங்களில் இதற்கான பரிவர்த்தனைகள் நிறைவு பெறும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. பீஜோ நிறுவனத்தை மஹிந்திரா கையகப்படுத்திய பின்னர் பீஜோ நிர்வாக குழுவில் மஹிந்திரா சார்பில் 3 போர்டு உறுப்பினர்களும், பீஜோ சார்பில் 2 போர்டு உறுப்பினர்களும் நியமிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








