பெங்களூரில் டயர் பஞ்சர் பிரச்னைக்கு காரணமாக குற்றவாளி கைது!
பெங்களூரில், சாலையில் ஆணி, நகங்களை போட்டு வாகனங்களில் பஞ்சரை ஏற்படுத்தி பிழைப்பு நடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரில், பல இடங்களில் வாகனங்கள் பஞ்சராகும் பிரச்னை இருந்து வருகிறது. இதற்கு அருகிலுள்ள பஞ்சர் கடை வைத்திருப்பவர்கள் ஆணிகள் மற்றும் நகங்களை சாலையில் தூவிவிடுவதே காரணம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாரத்தஹள்ளி முதல் சில்க்போர்டு ஜங்ஷன் வரையிலான சாலையில் அடிக்கடி வாகனங்கள் பஞ்சராகும் பிரச்னை இருப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. மேலும், வாகனங்கள் பஞ்சராவதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் பெரும் தலைவலியாக மாறியது.
அந்த சாலையில் வாகனங்கள் அடிக்கடி பஞ்சராவதற்கு ஆணி மற்றும் நகங்களை தூவுவதும் காரணம் என போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, இந்த செயலில் ஈடுபட்டவரை அடையாளம் காண போலீசார் அதிரடியாக களமிறங்கினர். இதற்காக, 7 போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, மாரத்தஹள்ளி முதல் சில்க்போர்டு வரை கடந்த ஒரு வாரமாக கண்காணிப்பில் இருந்தனர்.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாரத்தஹள்ளி அருகே அவுட்டர்ரிங் ரோட்டில் இருசக்கர வாகனம் ஒன்று பஞ்சராகி நின்றது. அப்போது, அந்தவழியாக வந்த ஆட்டோரிக்ஷா ஓட்டுனர் அந்த இருசக்கர வாகன உரிமையாளரிடம் தன் ஆட்டோரிக்ஷாவில் காற்றுப் பிடிக்கும் எந்திரம் இருப்பதாகவும், காற்றுப் பிடித்து தருவதாக கூறியுள்ளார்.
அந்த ஆட்டோ டிரைவரை ஆபத்பாந்தவனாக கருதி காற்றுப்பிடித்து தர அனுமதித்துள்ளார். ஆனால், அந்த ஆட்டோ டிரைவர் டயர் பஞ்சராகிவிட்டது. என்னிடம் புதிய டயர் உள்ளது. ட்யூபை மாற்றவேண்டும். அதற்கு ரூ.300 செலவாகும் என கூறியுள்ளார். அவ்வளவு தொகை தர முடியாது என பைக் உரிமையாளர் கூறியுள்ளார். பின்னர் ரூ.50 மட்டும் குறைத்துக் கொள்வதாக கூறி ட்யூபை மாற்றிக் கொடுத்துள்ளார். இந்த காட்சியை அந்தப் பகுதியில் சாதாரண உடையில் ரோந்து பணியில் போலீசார் கவனித்துள்ளனர்.
பின்னர் அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து, போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அவர் அகரா பகுதியை சேர்ந்த ரங்கநாத் என்பது தெரியவந்தது. அவர்தான் சாலையில் ஆணிகளையும், நகங்களையும் தூவியது தெரிந்தது. அந்த சாலையில் வரும் டயர் பஞ்சராகும் வாகன ஓட்டிகளிடம் பஞ்சர் ஒட்டுகிறேன் என்ற பெயரில், முடிந்தவரை பணத்தை கறந்துவிடுவதை தொழிலாக கொண்டிருப்பதை ஒப்புக் கொண்டார்.
அகரா பகுதியில் கரும்பு ஜூஸ் கடை வைத்திருந்ததாகவும், அப்போது அருகிலிருந்து பஞ்சர் கடைகள் இதுபோன்று ஏராளமாக சம்பாதிப்பதை கண்டு இந்த தொழிலுக்கு மாறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக ஒரு ஆட்டோரிக்ஷாவை வாடகைக்கு எடுத்துள்ளார். தினசரி அந்த ஆட்டோரிக்ஷாவுக்கு ரூ.100 செலுத்தியுள்ளார். அந்த ஆட்டோரிக்ஷாவிலேயே பஞ்சர் போடுவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் புதிய டயர்கள், காற்றுப் பிடிக்கும் எந்திரம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவாராம்.
காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை பஞ்சர் தொழிலை பார்த்துவிட்டு வீடு திரும்பிவிடுவாரம். இந்த தொழிலில் நல்ல வருமானம் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இவர் பயன்படுத்திய ஆட்டோரிக்ஷா மற்றும் பஞ்சர் போடும் உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Source: Bangalore Mirror


Click it and Unblock the Notifications








