ஜனவரி முதல் பஜாஜ் பைக்குகளின் விலை உயர்கிறது!
ஜனவரி முதல் பஜாஜ் பைக்குகளின் விலை உயர்த்தப்பட இருக்கிறது. விலை உயர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
வழக்கமாக உற்பத்தி செலவீனத்தை காரணம் காட்டி ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் வாகன நிறுவனங்கள் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில், முன்னணி கார் நிறுவனங்கள் வெளியிட்ட நிலையில், இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ தனது பைக் மாடல்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.

உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதையடுத்து, ஜனவரி முதல் அனைத்து பைக்குகளின் விலையையும் உயர்த்த இருப்பதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-4 மாசு அம்சத்துடன் பைக்குகளின் எஞ்சினை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு புதிய விதிமுறையை அமல்படுத்த உள்ளது.

அதற்கு தக்கவாறு பல்சர் உள்பட தனது அனைத்து முன்னணி பைக் மாடல்களின் எஞ்சினை பிஎஸ்-4 மாசு உமிழ்வு அம்சத்துடன் அறிமுகம் செய்து வருகிறது பஜாஜ் ஆட்டோ.

இதனால், அந்த நிறுவனத்தின் உற்பத்தி செலவு வெகுவாக உயர்ந்துள்ளது. இதனை ஈடுகட்டும் விதத்தில் தற்போது பைக்குகளின் விலையை உயர்த்த இருக்கிறது.

மாடலுக்கு தக்கவாறு ரூ.700 முதல் அதிகபட்சமாக ரூ.1,500 வரை விலை உயர்வு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த பஜாஜ் டோமினார் பைக்கின் விலை மட்டும் உயர்த்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டில் பஜாஜ் பைக்குகளை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். அதேசமயத்தில், மிக சவாலான விலையில் வந்த டோமினார் பைக்கின் விலை உயர்வு இருக்காது என்பது சற்று ஆறுதல் தரும் விஷயம்.


Click it and Unblock the Notifications








