பல் வகை எரிபொருளில் இயங்கும் மோட்டார்சைக்கிள்: பீகார் இளைஞர் அசத்தல்!
பல் எரிபொருளிலும் இயங்கும் புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார். அந்த மோட்டார்சைக்கிள் பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
பல வகை எரிபொருளில் இயங்கும் புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்.
ஹிந்தி சினிமாவை பார்த்து இந்த பைக்கை உருவாக்கும் எண்ணம் தோன்றியதாக அவர் கூறியிருக்கிறார். அவரது மோட்டார்சைக்கிள் பற்றிய கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

பீகார் மாநிலம், கத்திஹர் என்ற இடத்தை சேர்ந்த இஷார் அலி என்பவர்தான் இந்த வித்தியாசமான மோட்டார்சைக்கிளை உருவாக்கியிருக்கிறார். 2006ம் ஆண்டு வெளிவந்த அஜய் தேவ்கனின் கோல்மால் படத்தில் இதுபோன்ற ஒரு மோட்டார்சைக்கிள் பயன்படுத்தப்பட்டது.

அந்த படத்தை பார்த்த பின்னர்தான், அதேபோன்று பல் வகை எரிபொருளில் இயங்கும் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் எண்ணம் தோன்றியதாக அவர் கூறியுள்ளார்.

இதற்காக காயலாங்கடை கண்டிஷனில் இருந்த பழைய யமஹா என்டைசர் மோட்டார்சைக்கிள் ஒன்றை ரூ.15,000 கொடுத்து வாங்கியுள்ளார். மேலும், இந்த மோட்டார்சைக்கிளில் கூடுதலாக ஒரு சக்கரத்தை பின்புறத்தில் இணைத்திருக்கிறார்.

அதன்பிறகு பல்வகை எரிபொருளில் இயங்கும் வகையில் எரிபொருள் செல்லும் அமைப்பு மற்றும் எஞ்சினில் மாற்றங்களை செய்துள்ளார்.

பின்புறத்தில் கூடுதலாக இணைக்கப்பட்ட சக்கரத்தின் மேல் எல்பிஜி சிலிண்டர் ஒன்று பொருத்தியுள்ளார். எல்பிஜி சிலிண்டர் கிட் சம்பந்தமாக ரூ.3,200 செலவிட்டுள்ளார்.

குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் 50 நாட்களில் இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கியதாக இஷார் அலி தெரிவித்தார். இந்த மோட்டார்சைக்கிள் எரிவாயுவில் இயங்கும் வசதி கொண்டதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.

மண்ணெண்ணெய் எரிபொருளில் இயங்கும்போது குறைவான செலவினம் கொண்ட மோட்டார்சைக்கிளாக இருக்கும். என்னுடைய இந்த மோட்டார்சைக்கிள் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்கு அரசு சார்பில் உதவியும் ஒத்துழைப்பும், உதவியும் கிடைக்கும் என்று நம்புவதாக இஷார் அலி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








