2 நிமிடத்தில் பைக் வாஷ்... அசத்தும் எக்ஸ்பிரஸ் பைக் ஒர்க்ஸ் நிறுவனம்!
வெறும் 2 நிமிடத்தில் தானியங்கி எந்திரம் மூலமாக இருசக்கர வாகனங்களை கழுவி சுத்தம் செய்து கொடுக்கும் புதிய தொழில்நுட்ப முறையை மும்பையை சேர்ந்த எக்ஸ்பிரஸ் பைக் ஒர்க்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.
வெறும் 2 நிமிடத்தில் தானியங்கி எந்திரம் மூலமாக இருசக்கர வாகனங்களை கழுவி சுத்தம் செய்து கொடுக்கும் புதிய தொழில்நுட்ப முறையை மும்பையை சேர்ந்த எக்ஸ்பிரஸ் பைக் ஒர்க்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.
மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் சர்வீஸ் சென்டர்களை திறந்துவிட்ட இந்த நிறுவனம் நாட்டின் அனைத்து நகரங்களிலும் தனது தானியங்கி சர்வீஸ் மையங்களை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளது.

மைக்ரோ அவன் சமையல் போல, சிறிய அறை போன்று இருக்கும் எந்திரத்திற்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்தினால், அடுத்த இரண்டு நிமிடத்தில் கழுவி சுத்தப்படுத்தி கொடுத்து விடுகிறது.

இதனால், வார இறுதி நாட்களில் வரும் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் சில நிமிடங்களில் தங்களது இருசக்கர வாகனங்களை கழுவி சுத்தப்படுத்தி எடுத்துக் கொண்டு சென்றுவிடலாம்.

இதன் மற்றுமொரு சிறப்பு, இந்த எந்திரத்தில் இருசக்கர வாகனங்களை கழுவும்போது வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த முடியும். அதாவது, 10 சதவீத கழிவு போக மீதம் 90 சதவீத நீரை மீண்டும் இருசக்கர வாகனங்களை கழுவுவதற்கு பயன்படுத்த முடியும்.

இந்த எந்திரத்தை நிறுத்துவதற்கு குறைந்த 200 முதல் 300 சதுர அடி இடவசதியும், தண்ணீர் வசதியும் இருந்தால் போதுமானது. எனவே, நகர்ப்புறத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2013ம் ஆண்டு எக்ஸ்பிரஸ் பைக் ஒர்க்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டது. என்ட்ராபி இன்னோவேஷன்ஸ் என்ற பொறியியல் கண்டுபிடிப்பு நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் தானியங்கி பைக் கழுவும் எந்திரத்தை பயன்படுத்தும் நிறுவனமாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தானியங்கி பைக் கழுவும் எந்திரத்தை ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் பயின்ற பட்டதாரிகள் சேர்ந்து வடிவமைத்து தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தானியங்கி முறையில் செயல்படுவதால், இந்த சர்வீஸ் மையத்திற்கு அதிக பணியாளர்களும் தேவைப்படாது.

இருசக்கர வாகனங்களை கழுவுவது மட்டுமில்லாமல், பாலிஷ் செய்வது, விரைவாக பழுது நீக்கி தரும் பணி மற்றும் 24 மணி நேர சாலை அவசர உதவி திட்டம் போன்ற சேவைகளையும் எக்ஸ்பிரஸ் பைக் ஒர்க்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

தற்போது மும்பை, ஹைதராபாத், திருச்சூர் உள்ளிட்ட 15 நகரங்களில் நேரடி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மூலமாக தனது சேவையை வழங்கி வருகிறது. விரைவில் கோவையிலும் யுனிக் மோட்டோ வாஷ் என்ற அங்கீகரிக்கப்பட்ட சேவை மையம் மூலமாக தனது சேவையை துவங்க இருக்கிறது.

மார்க் மொபியஸ் என்ற முதலீட்டாளரின் நிதி பங்களிப்பிலும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடேட் நிறுவனத்தின் ஒத்துழைப்பிலும் இந்த நிறுவனம் தனது சேவையை விரிவுப்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications