பழமைவாய்ந்த பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை வாங்கியது மஹிந்திரா!
இங்கிலாந்தை சேர்ந்த பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை மஹிந்திரா வாகன குழுமம் கையகப்படுத்தியிருக்கிறது. இதுபற்றிய விபரங்களை இந்த செய்தியில் படிக்கலாம்.
நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டு வாகன நிறுவனங்களை மஹிந்திரா வாகன குழுமம் தொடர்ந்து கையகப்படுத்தி வருகிறது. தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்ஸ், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ ஸ்கூட்டர் நிறுவனம், ஃபெராரி உள்ளிட்ட விலை உயர்ந்த கார்களை வடிவமைத்து தருவதில் புகழ்பெற்ற இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா உள்ளிட்ட நிறுவனங்களை கையகப்படுத்தியது.
அந்த நிறுவனங்களில் பெரும் பகுதி பங்குகளை கைவசப்படுத்தியதோடு, தொடர்ந்து முதலீடும் செய்து வருவதால், அந்த நிறுவனங்களின் வர்த்தகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அடுத்ததாக இங்கிலாந்தை சேர்ந்த பழமைவாய்ந்த பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை கையகப்படுத்தியிருக்கிறது மஹிந்திரா வாகன குழுமம்.

முன்னதாக, நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் மற்றும் பிஎஸ்ஏ நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.தற்போது நார்டன் நிறுவனத்தை விட்டு, பிஎஸ்ஏ நிறுவனத்தை மஹிந்திரா குழுமம் தேர்வு செய்து வாங்கியிருக்கிறது.

34 லட்சம் பவுண்ட் [இந்திய மதிப்பில் ரூ.28 கோடி] மதிப்பில், பிஎஸ்ஏ நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் முழுமையாக வாங்கி சொந்தமாக்கியிருக்கிறது. மஹிந்திரா.

இதுதொடர்பாக மஹிந்திரா வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தனது அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் மூலமாக பிஎஸ்ஏ நிறுவனத்தின் 100 சதவீத பங்கு முதலீடுகளை வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

ஒரு பங்கின் விலை ரூ.2,611 என்ற மதிப்பில் பிஎஸ்ஏ நிறுவனத்தின் 1.2 லட்சம் பங்குகளை வாங்கியிருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, பிஎஸ்ஏ பிராண்டின் மோட்டார்சைக்கிள்களை உலக அளவில் மார்க்கெட்டிங் செய்வதற்கும், விற்பனை செய்வதற்குமான உரிமையை கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது.

ராணுவ பயன்பாடு மற்றும் ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள்களை வடிவமைப்பதில் பிஎஸ்ஏ நிறுவனம் தனித்துவம் பெற்றது. இந்த நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு உலக அளவில் பைக் பிரியர்கள் மத்தியில் தனி மவுசு உண்டு.

இங்கிலாந்தை சேர்ந்த பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் நிறுவனமானது, தற்போது அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, கனடா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வரத்தகத்தை செய்து வருகிறது.

பாரம்பரியம் மிக்க பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் நிறுவனம் மஹிந்திராவின் கைகளுக்கு வந்திருப்பதால், அந்த நிறுவனத்தின் வர்த்தகம் மறுமலர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலும், பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்களை மஹிந்திரா வாகன குழுமம் அறிமுகம் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

வெளிநாட்டு நிறுவனங்களை தவிர்த்து, கைனெட்டிக் இருசக்கர வாகன நிறுவனமும், ரேவா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தையும் மஹிந்திரா கையகப்படுத்தியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








