டிவிஎஸ் நிறுவனத்தை வம்புக்கிழுத்த பஜாஜ்... அவதூறு வழக்குப் பதிவு....!!
பொதுவாகவே மார்க்கெட்டில் பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அந்தப் போட்டி ஆரோக்கியமானதாக இல்லாமல், அவதூறு பரப்பும் வகையில் இருந்தால்தான் பெரிய சிக்கல் எழும்.
அது நிறுவனங்களுக்கு இடையே கசப்பானதொரு அனுபவத்தை அது தந்து விடும்... அப்படி ஒரு சம்பவம்தான் டிவிஎஸ் மற்றும் பஜாஜ் நிறுவனத்துக்கு மத்தியில் அண்மையில் நடைபெற்றுள்ளது.

இதன் காரணமாக கோர்ட் வரை டிவிஎஸ் நிறுவனம் சென்று, பஜாஜ் நிறுவனம் மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது.
விஷயம் இதுதான்....
பஜாஜ் சிடி 100 பைக்கின் விளம்பரத்தில், டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மாடல் இழிவாக சித்திரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வண்டிகளில் எது அதிக மைலேஜ் கொடுக்கும் என்ற ஒப்பீடை அந்த விளம்பரத்தின் வாயிலாக மேற்கொண்டுள்ளது பஜாஜ் நிறுவனம்.
கடுப்பாகிப் போன டிவிஎஸ் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பஜாஜ் நிறுவனத்துக்கு எதிராக அவதூறு வழக்கைப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் தரப்பில் இருந்து பஜாஜ் தரப்புக்கு செம டோஸ் விழுந்திருக்கிறது.
ஒப்பீடு என்பதோ, மிகைப்படுத்திச் சொல்வதோ விளம்பரத்தில் இயற்கை என்று தெரிவித்த நீதிபதிகள், அதேவேளையில், அந்த ஒப்பீடு தனது சொந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுடன்தான் இருக்க வேண்டுமே தவிர, பிற பைக் நிறுவனங்களை வம்புக்கு இழுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இரு வாரங்களுக்குள் உரிய பதில் அளிக்குமாறு பஜாஜ் நிறுவனத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதுவரை சர்ச்சைக்குரிய அந்த விளம்பரத்தை ஒளிபரப்புவதற்கும் இடைக்காலத் தடை விதித்துள்ளனர்.
பிற நிறுவனங்களின் தயாரிப்புகளை இழிவுபடுத்தும் வகையில் விளம்பரம் செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இடமுண்டு என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
செயல்பாடுகள் மற்றும் தரத்தின் அடிப்படையில் போட்டி இருந்தால், மக்கள் நீதிபதிகளாக இருந்து நல்ல மாடல் பைக்குகளுக்கு வெற்றியைத் தேடித் தருவார்கள். அதே, விளம்பரத்தின் வாயிலாக சீண்டிப் பார்க்கும் போட்டி இருந்தால் நீதிமன்றத்தில்தான் அந்த விஷயம் நிலுவையில் கிடக்கும்.


Click it and Unblock the Notifications








