மோட்டார் வாகன சட்டம் பற்றி போலீஸாருக்கு விழிப்புணர்வு தேவை... ஃபேஸ்புக் வீடியோவால் பரபரப்பு..!!
மோட்டார் வாகன சட்டம் பற்றி போலீஸாருக்கு விழிப்புணர்வு தேவை... ஃபேஸ்புக் வீடியோவால் பரபரப்பு..!!
வாகன ஓட்டிகளுக்கும், காவல்துறைக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். சில சமயங்களில் இந்த இருதரப்பு சந்திக்கும் தருணங்கள் ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக வரும் அளவிற்கு சென்றுவிடும்.

இதை மீண்டும் நிரூபிக்கும் சம்பவம் ஒன்று சமீபத்தில் கேரளாவில் நடந்துள்ளது. இணையதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை அறியலாம்.

2017 கேடிஎம் டியூக் 390 மாடல் பைக்கில் வந்த மொஹமத் இஸ்மாயில் என்ற இளைஞரை போலீஸார் வழிமறித்துள்ளனர்.
சூப்பர்பைக்கில் யார் வந்தாலும், போலீஸார் இடமறிப்பது சகஜம் என நினைத்து, இளைஞரும் பைக்கை நிறுத்தியுள்ளார்.

மொஹமத் பைக்கை நிறுத்தியதற்கான காரணத்தை கேட்டுள்ளார். ஆனால் அதற்கு போலீஸார் பதிலளிக்காமல், அவரது கேடிஎம் பைக்கையே உற்று நோக்கிக்கொண்டு இருந்தனர்.

அப்போது மொஹமத் அணிந்திருந்த ஹெல்மெட்டில் கோப்-ரோ என்ற ரக கேமரா பொருத்தப்பட்டு இருப்பதை பார்த்தனர்.

மேலும் இதற்கு முன்னர் மொஹமத் இருந்த இடம், தற்போது தங்களது பிடியில் அவர் இருப்பது என அனைத்தையும் அந்த கோப்-ரோ பதிவு செய்துவருவதை போலீஸார் அறிந்துக்கொண்டனர்.

இதனால் இளைஞரை ஹெல்மெட்டை கழட்ட போலீஸார் கூற, அவர் கழட்டிய உடன், ஹெல்மெட்டை போலீஸாரில் ஒருவர் பறிமுதல் செய்துவிட்டார்.
இதற்கான காரணத்தை மொஹமத் கேட்டபோது, ஹெல்மெட்டில் கேமரா பொருத்துவது சட்டப்படி குற்றம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் பயன்படுத்தி வரும் கேடிஎம் டியூக் 390 பைக்கில் பல்வேறு மாடிஃபிகேஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவும் சட்டப்படி குற்றம் என தெரிவித்துள்ளனர்.

ஹெல்மெட்டில் கேமரா பொருத்துவது சட்டப்படி குற்றம் ஆகாது. மேலும் அந்த கேடிஎம் டியூக் 390 பைக் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட மாடலும் அல்ல. இதை கூற இளைஞர் மொஹமத் முற்பட, அது போலீஸாருக்கும், அவருக்கும் மிகவும் வாக்குவாதமாக மாறியது.

இளைஞர், போலீஸார் சட்டப்படி கூறிய காரணத்தை தவறு என்று இளைஞர் கூற, பைக்கை பறிமுதல் செய்வது மீதே போலீஸாரின் கவனம் சென்றுள்ளது.

கேமராவை நீக்க சொல்லி போலீஸார் தொடர்ந்து வலியுறுத்த இளைஞர் அதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில், இறுதியாக பைக்கில் ரியர் வியூ மிரர் இல்லை என்றுக்கூறி அதற்கான அபாரதத்தொகையை போலீஸார் வசூலித்து இடத்தை விட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் முழுக்க ஹெல்மெட்டில் பொருத்தியிருந்த கோப்-ரோ கேமராவில் பதிவாகியுள்ளது. துல்லியமான ஆடியோ, காட்சிகள் கொண்ட வீடியோவை சப்டைட்டிலுடன் மொஹமத் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இணையதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ காட்சியை காணும் பார்வையாளர்கள் அனைவரும், மோட்டார் வாகன சட்டம் குறித்த விழிப்புணர்வை காவல்துறையினரிடம் ஏற்படுத்த வேண்டும் என கமென்டு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








