ஹோண்டாவின் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக ஷோரூம்: 150 வது கிளை கோவையில் திறப்பு.!
ஹோண்டாவின் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக ஷோரூமின் 150 வது கிளை கோவையில் திறக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது பிரத்யேக ப்ரீ யூஸ்டு பைக் ஷோரூமின் 150வது கிளையை கோவையில் திறந்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் ‘பெஸ்ட் டீல்' என்ற பெயரில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக ஷோரூம்களை டீலர்கள் மூலம் திறந்து வருகிறது.

தற்போது இந்நிறுவனத்தின் 150வது ப்ரீ யூஸ்டு பைக் ஷோரூமினை ‘ஆதி ஹோண்டா' என்ற டீலர் மூலமாக கோவையில் துவக்கியுள்ளது.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான சந்தை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஹோண்டா நிறுவனம் இந்த தொழிலில் இறங்கியுள்ளது. 2017-18 நிதி ஆண்டின் இறுதிக்குள் 200 ‘பெஸ்ட் டீல்' கிளைகளை திறக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான சந்தையில் நான்கு சக்கர வாகனங்களே இடம்பிடிக்கும் நிலையில், தற்போது இருசக்கர வாகன விற்பனையில் ஹோண்டா நிறுவனம் இந்த யுக்தியை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பிஎஸ்-3யில் இருந்து பிஎஸ்-4 தொழில்நுட்பத்திற்கு மாற்றமடைந்தது காரணமாக வாகன விற்பனை சந்தை சரிவடைந்த போதிலும், பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனை சந்தை ஏறுமுகமாகவே உள்ளது.

கடந்த நிதி ஆண்டில் ஹோண்டாவின் பெஸ்ட் டீல் வாயிலாக பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனை 23% வளர்ச்சியை அடைந்துள்ளது. இதே நேரத்தில் புதிய வாகன விற்பனையின் ஒட்டுமொத்த வளர்ச்சி 7 % ஆக இருக்கும் நிலையில், இது மூன்று மடங்கு வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இது பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான அதிகரித்து வருவதை காட்டுகிறது.

150வது ப்ரீ யூஸ்டு பெஸ்ட் டீல் ஷோரூமை துவக்கி வைத்து பேசிய அந்நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் யத்வீந்தர் சிங் குலேரியா, எங்களுடைய அனுபவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான சந்தை அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது என்றும், புதிய இருசக்கர வாகனம் பயன்படுத்தும் காலகட்டம் 4-5 ஆண்டுகளாக குறைந்துள்ளது என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications








