புதிய ஹோண்டா ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
பாரத் ஸ்டேஜ்-4 தரத்துடன் புதிய ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது ஹோண்டா நிறுவனம். அது குறித்த தகவல்களை காணலாம்.
உலகின் பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, இந்தியாவிலும் முன்னனி நிறுவனமாகவும் விளங்கி வருகிறது. இதன் ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையில் நம்பர்-1 இடத்தில் நீடித்து வரும் நிலையில், பாரத் ஸ்டேஜ்-4 என்ற மாசு உமிழ்வு தரச் சான்று பெற்ற புதிய இஞ்சினுடன் புதிய ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது ஹோண்டா நிறுவனம்.

ஆக்டிவா 4ஜி என்பது நான்காம் தலைமுறை ஆக்டிவா என்பதனை குறிக்கும். நான்காவது முறையாக அப்கிரேடு செய்யப்பட்டு வெளிவந்திருக்கும் புதிய ஆக்டிவா-4ஜி ஸ்கூட்டர் ஆட்டோமேடிக் ஹெட்லைட் மற்றும் பிஎஸ்-4 சான்று பெற்ற எஞ்சின் கொண்டு வெளிவந்துள்ளது.

இதில் புதிய ரீடிசைன் செய்யப்பட்ட முன்புற கவர் டிசைன் மற்றும் மொபைல் சார்ஜ் செய்யும் போர்ட் ஆகியவை புதிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. மற்றபடி பழைய ஆக்டிவாவில் இருக்கும் ட்யூப்லெஸ் டயர்கள், சீட்டின் கீழ் உள்ள ஸ்டோரேஜ் வசதி, மற்றும் இலகுவாக சர்வீஸ் செய்ய வசதியாக முன்புறத்தை தூக்க உதவும் CLIC மெக்கானிசம் ஆகியவை இதிலும் உள்ளன.

ஆக்டிவா 4ஜி தற்போது மேட் செலின் சில்வர் மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் ஆகிய இரண்டு புதிய கவர்சிகரமான வண்ணங்களில் கிடைக்கிறது.

மேலும், புதிய ஆக்டிவா 4ஜி-யில் ஈக்குவலைசர் டெக்னாலஜியுடன் கூடிய ஹோண்டாவின் பிரத்யேக காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (CBS) தரப்பட்டுள்ளது. இது இரண்டு சக்கரங்களுக்கும் பிரேக் விசையை பிரித்து சரிசமமாக வினியோகிக்கிறது. இது ஒரு மேம்பட்ட பிரேக்கிங் சிஸ்டமாகும்.

புதிய ஹோண்டா ஆக்டிவா4ஜி-யில் பாரத் ஸ்டேஜ்-4 தரச் சான்று பெற்ற 109சிசி இகோ டெக்னாலஜி (HET) இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 8 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும் AHO எனப்படும் தானியங்கி முகப்பு விளக்கும் இடம்பெற்றுள்ளது.

புதிய ஆக்டிவா அறிமுகம் குறித்து ஹோண்டா மோட்டார்ஸ் - ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு முதுநிலை துணைத் தலைவர் யத்வீந்தர் சிங் குலேரியா கூறியதாவது, "1.5 கோடி இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பெற்ற ஆக்டிவா ஸ்கூட்டர் இந்தியா மட்டுமல்லாது 2016ஆம் ஆண்டில் உலகிலேயே அதிகம் விற்பனையான ஸ்கூட்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளது" என்றார்.

மேலும் அவர் கூறும்போது, வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பெற்ற ஆக்டிவா, புதிய மாற்றங்களுடன் நான்காம் தலைமுறை ஸ்கூட்டராக வெளிவந்துள்ளது, இது வாடிக்கையாளர்களை மேலும் திருப்திப்படுத்தும் என்றார்.

இந்தியாவில் 2000ம் ஆண்டு முதலாக கடந்த 17 ஆண்டுகளாக விற்பனையில் இருந்து வரும் ஆக்டிவாவின் புதிய நான்காம் தலைமுறை ஸ்கூட்டர் ரூ.50,730 (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கிறது.
புதிதாக அறிமுகமாகவுள்ள பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கின் படங்கள்:


Click it and Unblock the Notifications








