2018 டக்கார் ராலிக்கான ஷெர்கோ டிவிஎஸ் ரேஸிங் அணி வீரர்கள் அறிவிப்பு!
டக்கார் ராலியில் பங்கேற்க இருக்கும் ஷெர்கோ டிவிஎஸ் அணியின் வீரர்கள் மற்றும் பைக் மாடல் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2018 டக்கார் ராலி ரேஸ் பந்தயத்திற்கான ஷெர்கோ டிவிஎஸ் ரேஸிங் அணி சார்பில் பங்கேற்க இருக்கும் வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் தனது வீரர்களை அறிமுகம் செய்ததோடு, பந்தயத்தில் பயன்படுத்தப்பட இருக்கும் ஆர்டிஆர் 450 பைக்கையும் காட்சிக்கு வைத்திருந்தது.

வரும் ஜனவரி மாதம் தென் அமெரிக்காவிலுள்ள பெரு, பொலிவியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் 2018 டக்கார் ராலி பந்தயம் நடைபெற இருக்கிறது. வீரர்களுக்கு மிக சவாலான இந்த நீண்ட தூர ராலி ரேஸில் நம் நாட்டை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனங்களின் அணிகள் பங்கேற்க உள்ளன.

இந்த நிலையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஷெர்கோ டிவிஎஸ் ரேஸிங் அணி சார்பில் பங்கேற்கும் வீரர்கள் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டனர்.

ஷெர்கோ டிவிஎஸ் ரேஸிங் அணி சார்பில் ஜோன் பெட்ரேரோ, அட்ரியன் மெட்ஜ் மற்றும் அரவிந்த் கேபி ஆகிய மூன்று பேரும் ஷெர்கோ டிவிஎஸ் ரேஸிங் அணி சார்பில் 2018 டக்கார் ராலியில் பங்கேற்க உள்ளனர்.
Recommended Video


இதில், ஸ்பெயினை சேர்ந்த ஜோன் பெட்ரேரோ அனுபவம் வாய்ந்த வீரர். ஆஃப்ரோடு பைக் பந்தயங்களில் பழுத்த அனுபவம் வாய்ந்த ஜோன் பெட்ரேரோ 10வது முறையாக டக்கார் ராலியில் பங்கேற்க இருக்கிறார். 2014ம் ஆண்டு ஷெர்கோ டிவிஎஸ் ரேஸிங் அணியில் இணைந்த இவர், 2015ம் ஆண்டு முதல் டிவிஎஸ் அணி சார்பில் டக்கார் ராலியில் பங்கேற்று வருகிறார்.

மற்றொரு வீரரான அட்ரியன் மெட்ஜ் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். இவர் மூன்றாவது முறையாக டக்கார் ராலியில் பங்கேற்க இருக்கிறார். மிக சிறுவயதில் இருந்தே மோட்டார்சைக்கிள் ஓட்டுவதிலும், ஆஃப்ரோடு சாகசங்களிலும் அனுபவம் வாய்ந்த வீரர்.

ஷெர்கோ டிவிஎஸ் ரேஸிங் அணியில் இடம்பெற்றிருக்கும் இந்திய வீரர் அரவிந்த் கேபி. 32 வயது நிரம்பிய இவர் கர்நாடக மாநிலம், உடுப்பியை சேர்ந்தவர். ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி சார்பில் பங்கேற்கும் சிஎஸ். சந்தோஷ் தவிர்த்து, டக்கார் ராலியில் பங்கேற்கும் மற்றொரு இந்திய வீரர் அரவிந்த் கேபி என்பது குறிப்பிடத்தக்கது.

டக்கார் ராலிக்காக தயாரிக்கப்பட்ட ஆர்டிஆர் 450 மோட்டார்சைக்கிளை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஷெர்கோ நிறுவனத்துடன் இணைந்து டிவிஎஸ் மோட்டார்ஸ் தயாரித்துள்ளது. சர்வதேச அளவிலான மோட்டார் பந்தயங்களில் பங்கேற்கும் நோக்கில் இந்த கூட்டணி செயல்பட்டு வருகிறது.
Trending On DriveSpark Tamil:

டக்கார் ராலிக்காக தயாரிக்கப்பட்ட ஆர்டிஆர் 450 மோட்டார்சைக்கிள் நம்பகத்தன்மையிலும், செயல்திறனிலும் மிகச் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் அதிகபட்சமாக 69 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. பழைய மாடல்களைவிட கூடுதலாக 3 பிஎச்பி பவரை கூடுதலாக வழங்கும் விதத்தில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிள்களில் தற்போது வீரர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின்போது பேசிய டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரிமியம் டூவீலர்கள் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் அருண் சித்தார்த்," டக்கார் ராலியில் களமிறங்கிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமை டிவிஎஸ் மோட்டார்ஸுக்கு உண்டு.

டக்கார் ராலிக்காக முழு வீச்சில் தயாராகி வருகிறோம். வரும் டக்கார் ராலியில் முதல் 10 இடங்களுக்குள் வருவதே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்," என்று அருண் சித்தார்த் கூறினார்.

உலகிலேயே மிக சவாலான ராலி ரேஸ் பந்தயம் டக்கார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலிருந்து ஆப்ரிக்காவிலுள்ள டக்கார் என்ற இடத்திற்கு நடத்தப்பட்டு வந்த இந்த பழமையான ராலி ரேஸ் பந்தயம், பாதுகாப்பு காரணங்களுக்காக தென் அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டது.

வரும் ஜனவரி மாதம் 6ந் தேதி தொடங்கி, 20ந் தேதி வரை நடக்கிறது. பாலைவனம், ஆறுகள், கரடுமுரடான மலைப்பாதைகளை கடக்கும் வகையில், இந்த ராலி ரேஸ் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 9,000 கிமீ தூரத்தை கடக்க வேண்டும்.

டக்கார் ராலி தவிர்த்து, பாஜா அரகான், மெர்ஸுகா ராலி மற்றும் ஒலிபியா ராலி போன்ற சர்வதேச ராலி பந்தயங்களில் பங்கேற்கும் திட்டமும் ஷெர்கோ டிவிஎஸ் அணி வசம் உள்ளது.
Trending On DriveSpark Tamil:


Click it and Unblock the Notifications








